திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறாரா குஷ்பு?.. அந்த தொகுதி ஏன்.. பிளாஷ்பேக் காரணம் இருக்கே
சென்னை: நடிகை குஷ்பு திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது ஆவது முறையாக வென்று ஆட்சியை தொடர என தேசிய ஜனநாயக கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளோ "இந்தியா" என்ற பெயரில் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பாஜக அரசை விரட்ட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்கள்.
திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே நாடாளுமன்றத் தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுகவை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில்தான் இந்த கூட்டணி என அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிமுக- பாஜகவுக்கு இடையே எத்தனையோ விரிசல்கள் இருந்தாலும் வரும் தேர்தலில் 10 எம்பி தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற பாஜக விரும்புகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு 5 எம்பி தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது. இதில் ஒன்றில் கூட பாஜக வெல்லவில்லை. தற்போது அதிமுகவில் சில பிரச்சினைகள் இருப்பதால் தான்தான் உண்மையான அதிமுக என்பதையும் தனது செல்வாக்கையும் இந்த தேர்தலில் நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார்.
இதனால் 10 தொகுதிகளை தூக்கி கொடுப்பாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக தான் வலுவாக இருப்பதாக கருதும் தென்சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற முனைப்பு காட்டி வருகிறதாம். இதில் திருச்சி தொகுதியில் நடிகை குஷ்புவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குஷ்பு பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். அத்துடன் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தட்டி கேட்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக சாரபில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் குஷ்பு. இதனால் அவரை திருச்சி எம்பி தொகுதியில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குஷ்பு 1988 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் திருச்சி மண்டையூர் அருகே குஷ்புக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். அதனால்தான் திருச்சியில் அவரை களமிறக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இல்லாவிட்டால் தென் சென்னை தொகுதியையாவது குஷ்புவுக்கு ஒதுக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications