சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஆலப்பாக்கம் வீட்டிற்குள் நுழைந்தார் நடிகை வனிதா
சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் வீட்டிற்குள் நடிகை வனிதா நுழைந்தார்.
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டில் அவரது மகள் வனிதா கடந்த செப்டம்பரில் படப்பிடிப்பு நடத்தினார்.
படப்பிடிப்புக்கு பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்யாததால் மதுரவாயல் போலீஸிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் விஜயகுமார் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் தலையிட்டு, நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை அந்த வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
அப்போது வனிதாவின் நண்பர்கள் தகராறில் ஈடுபட்டதால், போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார்.

பேட்டி
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று காலை தனது வழக்கறிஞர்கள் உடன் வீட்டிற்குள் நுழைந்த நடிகை வனிதா பேட்டியளித்தார்.

மஞ்சுளாவின் வீடு
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு என் அம்மா மஞ்சுளா பெயரில் உள்ள இந்த வீட்டை விட்டு நான் போலீஸாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். நான் நடித்து சம்பாதிக்கும் போது வாங்கிய வீடு.

இடையூறு இல்லை
இந்த வீட்டில் நான் உள்பட என்னுடன் பிறந்த இரண்டு சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. நான் நியாயம் கேட்டு உச்சநீதிமன்றம் சென்று ரிட்மனு தாக்கல் செய்தேன். அங்கு எனக்கு பாத்தியப்பட்ட இந்த வீட்டில் இருப்பதற்கு யாரும் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.

உத்தரவு நகல்கள்
தேவைப்பட்டால் காவல் துறை உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நகல்களை காவல் துறை தலைவர் கமிஷனர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளேன் என்றார் வனிதா.












Click it and Unblock the Notifications