சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்! பைக் நிறுத்த இடமில்லாமல் திணறும் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களைத் தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகள் தங்கள் வாகனங்களை ரயில் நிலையங்களின் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்திவிட்டு ரயில்கள் மூலம் பணியிடங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் சென்று வருகிறார்கள்.

ஆங்காங்கே மெட்ரோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் நிறைய பேர் மெட்ரோ ரயில்கள் மூலம் பயணிக்கிறார்கள். இதன் மூலம் நேரமும் எரிபொருளும் மிச்சமாவதால் பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தான இந்த மெட்ரோவை தேர்வு செய்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதிகளில் நிறைய வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நெரிசலாக இருக்கிறது. குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட நிலையங்களில் காலை 10 மணிக்கே பார்க்கிங் பகுதி நிரம்பி வழிகிறது.
இதனால் நிறைய பேரின் வாகனங்களை நிறுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில்தான் இரண்டாவது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மேம்பாலம் மற்றும் சுரங்க பாதைகளில் 120 க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் வசதிகள் இருந்தாலும் ரயில் நிலையங்கள் அருகே வாகனங்கள் நிறுத்த கூடுதல் இடங்களை மெட்ரோ நிறுவனம் தேடுகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணப்படுகிறது. அருகே இருக்கும் இடங்களை வாங்கி இருக்கிறோம். மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த இடங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கூடுதல் இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
இதன் படி கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி பைபாஸ், சோழிங்கநல்லூர், சிறுச்சேரி , போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களைத் தேர்வு செய்து இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன என தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications