விசிக தீர்மானம் திமுக எதிர்ப்பால் தோல்வி.. கூடுதல் நில அளவையர்கள்.. சட்டசபையில் 2 சம்பவங்கள்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளின் நில அளவு தரவை பதிவேற்ற கூடுதலாக 20 நில அளவையர் நியமிக்கப்படுவார்கள். இதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிவாசல், தர்க்காக்களை புனரமைக்க மானிய தொகை ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.
சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் நாசர் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை, நெல்லை, கரூர், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் நெல்லை, விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் தொடங்கப்படும்.

இதற்காக தலா ரூ.7 லட்சம் வழங்கப்படும்.கல்லறை தோட்டம், கபர்ஸ்தான்களில் உள்ள பழுதடைந்த சுற்றுச்சுவர்கள் சீரமைப்பு மற்றும் புனரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறுபான்மையின 10 மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டமேற்படிப்பு மேற்கொள்ள கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் வகுக்கப்படும்.
பவுத்த மதத்தினர் நாக்பூரில் விஜயதசமி அன்று நடக்கும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்க ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 150 நபர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், 20 சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 120 நபர்களுக்கு ரூ.12 லட்சம் மானியம் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள வக்பு சொத்துகளின் நில அளவு தரவை பதிவேற்ற கூடுதலாக 20 நில அளவையர் நியமிக்கப்படுவார்கள். இதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிவாசல், தர்க்காக்களை புனரமைக்க மானிய தொகை ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக உயர்த்தப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசிக கொண்டு வந்த தீர்மானம் திமுக எதிர்ப்பால் தோல்வி
சட்டசபையில் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திருத்தச் சட்ட மசோதா, ஆய்வுக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் பதவி வழி தலைவராக மாவட்ட கலெக்டரும், அரசால் நியமிக்கப்படும் நபர்களில் 3 பேர் அரசு அலுவலர்களாகவும், ஒருவர் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பதற்கு அந்த சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
மசோதா ஆய்வுக்கு எடுக்கப்பட்டபோது அதில் விடுதலைச் சிறுத்தை கட்சி (வி.சி.க.) எம்.எல்.ஏ. பாலாஜி அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எம்.எல்.ஏ. பாலாஜி கூறுகையில், ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என்பதை 2 எம்.எல்.ஏ.க்கள் என்று மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக குறிப்பிட்டார். அதை அதே கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் வழிமொழிந்தார்.
அதைத்தொடர்ந்து அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பிற்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அனுமதித்தார். அந்த தீர்மானத்தை எந்தக் கட்சியினருமே ஆதரிக்கவில்லை. ஆனால் அதை எதிர்ப்போர் யார் யார்? என்று சபாநாயகர் கேட்டபோது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே எதிர்த்து வாக்களித்தனர். எனவே அந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications