அதிமுக கரை வேட்டி கட்ட முடியாது.. நீதிபதியே ஓபிஎஸ் தரப்பை பார்த்து நேரா கேட்டார்.. இன்பதுரை பேட்டி!
சென்னை: ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் உங்கள் தரப்பு தோல்வி அடைந்துள்ளது. எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? என நீதிபதி நேராகவே ஓபிஎஸ் தரப்பை பார்த்து கேட்டார் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. எனினும், அதிமுக லெட்டர் ஹெட் பயன்படுத்தி ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக கொடி, சின்னம்: அதிமுக கொடி, சின்னத்தையும் பயன்படுத்தி வருகிறது ஓபிஎஸ் அணி. இதனால் அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர். தொடர்ந்து ஓபிஎஸ் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தி வருவதாக எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓபிஎஸ் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார் என்ற வாதத்தை முன்வைத்தது. இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது, இதுவரை ஓபிஎஸ் தரப்பு பதில் மனுதாக்கல் செய்யவில்லை என எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
அதிரடி உத்தரவு: ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி, மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நம்பர் ஆகிவிட்டது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறோம். குறுகிய கால அவகாசம் வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு பதில் மனு தாக்கல் செய்கிறோம் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நான்கு ஐந்து மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. மக்களிடமும் கட்சியினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். இதை ஏற்கக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
வாதங்களைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், "எத்தனை முறை தான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுவீர்கள்" என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இன்பதுரை பேட்டி: இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞரும், அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக பொதுச் செயலாளர் என சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
அப்படி இருக்கும்போது, ஓபிஎஸ் அதிமுக வேட்டியை கட்டுவது முறையா? அதிமுக லெட்டர் பேடை, கொடியை, சின்னத்தை பயன்படுத்துவது முறையா? ஓபிஎஸ்ஸால் அதிமுகவின் நடவடிக்கைகள் சீர்குலையும். ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் சட்டத்தை மீறிய செயல் எனக் கூறி இந்த வழக்கை தொடர்ந்திருந்தோம்.
நீதிபதி நேரடியாக கேட்டார்: இதில் பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பினர் வாய்தா கேட்டிருந்தார்கள். இந்நிலையில் தான் இன்று, ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் உங்கள் தரப்பு தோல்வி அடைந்துள்ளது. எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என நீதிபதி நேராகவே ஓபிஎஸ் தரப்பை பார்த்து கேட்டார்.
அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், அதிமுக அலுவலக முகவரி என எதையுமே ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளார் நீதிபதி. இனி ஓபிஎஸ் தரப்பினர், அதிமுக பெயர், கொடி என எதையும் பயன்படுத்த முடியாது. பன்னீர்செல்வம் வகையறாக்கள் அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications