என்னாது.. ஆத்தூரில் பாமகவா.. இப்பவே வெற்றிக் களிப்பில் மூழ்கிய திமுக.. 5 முறை "ஐபி" வென்ற தொகுதி!
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி போட்டியிட்டு வென்றவர்.
திமுக கூட்டணியில் ஆத்தூர் தொகுதி என்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஐ. பெரியசாமிக்கு என்பது எழுதப்படாத ஒன்று. இந்த முறையும் ஐ. பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆத்தூர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சிகள், ஆத்தூர், ரெட்டியார் சத்திரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 48 ஊராட்சிகள் உள்ளன.
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றிய பகுதிகளில் அதாவது திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் கணிசமான வன்னியர்கள் இருக்கின்றனர். இதனால் திண்டுக்கல் தொகுதியை பாமக கேட்பது வழக்கும். ஏற்கனவே பாமக போட்டியிட்டும் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் கூட பாமகதான் திண்டுக்கல்லில் போட்டியிட்டது.
ஆனால் பாமகவுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை என அப்பட்டமாக தெரிந்த தொகுதியான திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதன் மீது ஜெயலலிதா கடும் கோபத்தில் இருந்தார். இதனால் ஆத்தூர் தொகுதியில் ஐ. பெரியசாமியை எதிர்த்து போட்டியிட சொன்னார் ஜெயலலிதா.
ஐ. பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்டு நத்தம் விஸ்வநாதன் தோல்வியைத் தழுவினார். தற்போது பாமகவிடம் ஆத்தூர் தொகுதியை தள்ளிவிட்டிருக்கிறது அதிமுக என்றுதான் சொல்ல வேண்டும்.