சத்தமேயில்லாத பாஜக.. சட்டென எகிறியடிக்கும் அண்ணாமலை.. நாளும் குறிச்சாச்சு.. அதிமுக கூட்டணி அவ்ளோதானா
சென்னை: கூட்டணி முறிவை அதிமுக அறிவித்துவிட்ட நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த கூட்டம் நடக்க போவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்களும், பாஜக தொண்டர்களும் ஆளுக்கொரு பக்கம் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

சிறுபான்மை ஓட்டுக்கள்: எனினும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.. அதிமுக அறிவித்துள்ள இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, அண்ணாமலை மீதான அதிருப்தி + மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள். எனினும், சிறுபான்மையினர் ஓட்டுக்களை திமுக லேசில் விட்டுத்தருமா என தெரியவில்லை.
அதேசமயம், அதிமுக எடுத்த இந்த முடிவானது, மேலிட பாஜகவை அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.. உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வர உத்தரவிட்டதுடன் கூட்டணி முறிவு குறித்து பாஜக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்றவாறு, பாஜகவில் எந்த தலைவர்களுமே இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
ஜிகே வாசன்: பாஜக - அதிமுக இருவருமே சேர வேண்டும் என்பதுதான், கூட்டணி கட்சிகளின் விருப்பமாகவும் உள்ளது.. அந்தவகையில், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோர் மேலிட பாஜகவிடம் சமரசம் பேசிவருவதாகவும் செய்திகள் பரபரத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது.
அந்தவகையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அதிமுக கூட்டணி முறிவையடுத்து, தேசிய தலைமையின் முயற்சி தோல்வியை தொடர்ந்து, இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
முக்கியத்துவம்: இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி, உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வரும் இந்தக்கூட்டத்தில், மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பாஜக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications