பாமக தயவில் தான் அதிமுக வென்றது.. எந்த சுனாமிக்கும் அசராத கூட்டம் இது.. திலகபாமா அதிரடி
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவும், தவெகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறது. அந்தக் கட்சி தலைவர் அன்புமணி விஜய்யை வெகுவாக பாராட்டியுள்ள நிலையில், அதே மேடையில் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகி அதிமுகவை விமர்சித்துள்ளார். தங்களின் தயவால் தான் அதிமுக வென்றது என்று திலகபாமா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு பாமகவில் தந்தை மகன் அதிகார போட்டி உச்சத்தில் இருந்தது. ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டனர். தேர்தலுக்கு பிறகு இருவரும் சமாதானமாகிவிட்டனர். ராமதாஸின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவதற்கு அன்புமணி திட்டமிட்டு வருகிறார். மேலும் பலமான கூட்டணியுடன் பாமகவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல அன்புமணி திட்டமிட்டு வருகிறார். தவெகவுடன் ஆதரவான போக்கில் பாமக காய் நகர்த்து வருவதாக கூறப்படுகிறது.

பாமக தயவில் அதிமுக
இந்நிலையில் பாமக 38வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பேசுகையில், "4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறவில்லை. அதிமுக நம்ம தயவில் தான் நின்றது. அதிமுகவின் 34 தொகுதிகளையும் சேர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி அது. மொத்தம் நாங்கள் 38 தொகுதிகளில் ஜெயித்துள்ளோம். இந்த பாட்டாளி சொந்தம் மட்டும் தான் எந்த அலைக்கும், எந்த சுனாமிக்கும் அசராமல் நின்று சாதித்துள்ளது. ஏனால் எங்களிடம் போலித்தனம் இல்லை. சும்மா படம் காண்பிக்கிற தடம் இல்லை.
அதனால் நீ எங்க வேண்டுமானால் வாய்யா ராசா என்று அசராமல், தலைவன் சொல்கிற இடத்தில் ஓட்டு போட்டுள்ளனர். இன்றைக்கு மற்ற கட்சி தலைவர் சொன்னதே கேட்டும், அந்தக் கட்சியினர் வேலை செய்யவில்லை. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் கடை கோடி தொண்டன் கூட, பாமக தலைவர் சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு நடந்துள்ளோம் என்பதை இந்த தேர்தல் முடிவு நிரூபித்து காட்டியுள்ளது. அப்படியென்றால் 38 தொகுதியும் நமது வெற்றி தானே. எந்த அலையிலும் வீழ்ந்துவிடாத உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்" என்று கூறினார். திலகபாமாவின் கருத்து அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications