Neet Reexam: நீட் மறுத்தேர்வு! தேசிய அளவில் முதலிடம் பிடித்த இரு மாணவர்கள்! யார் அந்த AIR 1?
டெல்லி: நீட் மறுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பஞ்சாப், ஹரியானா மாணவர்கள் இருவர் ஒரே மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இருவரும் 720-க்கு தலா 715 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடந்தது.

இதில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தன. வினாத்தாள் டெலிகிராமில் லீக்காவதால் இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலியை கூட மத்திய அரசு தடை செய்து வைத்தது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 551 நகரங்களில் 5,440 மையங்களி, 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர். இந்த மறுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடந்த தேர்வை காட்டிலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
நீட் மறுத்தேர்வு நடத்தப்பட்டதால் அதன் முடிவுகள் எப்போது என மாணவர்கள் காத்திருந்தனர். அந்த வகையில் வரும் 20-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
ஆனால் நேற்றைய தினம் திடீரென தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 11.21 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பன்சூல் ஆகிய மாணவர்கள் 720 மதிப்பெண்களுக்கு தலா 715 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 138 மாணவர்கள், 720 மதிப்பெண் முதல் 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 58 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களையும் 1492 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல், 10160 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல், 90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியவர்களில் 93 சதவீதம் பேர் முதல்முறையாக தேர்வு எழுதியவர்கள். தேர்வில் முதல் 17 பேர் 705-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர். இவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.












Click it and Unblock the Notifications