வருமான வரியில் வரும் புதிய மாற்றம்.. மோடி அரசு கொண்டு வரும் புதிய மசோதாக்கள்! பிளான் இதுதான்
டெல்லி: வரும் திங்கள்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இதில் ஐந்து புதிய மசோதாக்கள் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள இரண்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள அந்த மசோதாக்கள் என்ன? அவை ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை எதையும் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லையாம். இருப்பினும், மத்திய அரசு முன்பு கொண்டு வந்த இரண்டு அவசர சட்டங்களுக்கு மாற்றாக இரண்டு புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த உள்ளது.

முக்கிய மசோதாக்கள்
அதில் முக்கியமானதாக FCRA எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவாகும். இந்த மசோதா கடந்த மார்ச் 25ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், 2025ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகமான "விக்சித் பாரத் கல்வி நிறுவனங்கள் மசோதா" தொடர்பாக இரு அவைகளின் கூட்டு குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மசோதா மீதான விவாதம் தொடரும் என கூறப்படுகிறது.
வருமான வரி மசோதா
அதேபோல மத்திய அரசின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக "வருமான வரி (திருத்த) மசோதா 2026" அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது முன்பு வெளியிடப்பட்ட அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்படுகிறது. சர்வதேச அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோக சங்கிலி சிக்கல்கள் நிலவும் சூழலில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த மசோதா உதவும் என கூறப்படுகிறது.
மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவும் அறிமுகமாக உள்ளது. தற்போதுள்ள 33 நீதிபதிகள் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க உதவும் என்று அரசு நம்புகிறது. இதுதவிர, மேலும் மூன்று புதிய மசோதாக்கள் அறிமுகமாக உள்ளன. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதா மூலம் தாமதமாக பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களுக்கு கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளன.
கடும் நடவடிக்கை
அதேபோல தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா மூலம் தேசியக் கொடி, தேசிய கீதம் உள்ளிட்ட தேசிய அடையாளங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வழிவகை செய்யப்படுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா மூலம் தொழில் செய்வதை எளிதாக்குவது, நிலுவைத் தொகை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண்பது மற்றும் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மத்திய அரசு திட்டம்
அதேநேரம் தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு, 30 நாட்கள் ஒரு தலைவர் தொடர்ந்து சிறையில் இருந்தால் தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாக்களும் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற அவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் நிலையில், அதை பெற முயற்சிகள் நடந்து வருகிறது. அந்த பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே இந்த மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.















Click it and Unblock the Notifications