பொதுக்குழு நெருங்க நெருங்க.. “ஆட்டம் காலி.. படுதாவும் காலி” ஒரே நாளில் அடுத்தடுத்து.. ஷாக் ஆன ஓபிஎஸ்
சென்னை : கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், 'ஒற்றைத் தலைமை' விவகாரம் சூடுபிடித்தபோது, தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி அரசியல் களத்தையே பரபரப்பாக்கினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
ஒரே வாரத்தில், அவரது ஆதரவாளர்கள் பலர் எதிர் முகாமுக்குத் தாவ, இப்போது பொதுக்குழு நெருங்கும் நேரத்தில் 'ஆட்டம் காலி.. படுதாவும் காலி' என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது ஓபிஎஸ் கூடாரம்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்து வந்த மூன்று மா.செக்கள் இன்று ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் சென்று எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துள்ளார்.

ஒற்றைத் தலைமை புயல்
அதிமுகவில எழுந்த'ஒற்றைத் தலைமை' முழக்கம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே பெரும் புயலைக் கிளப்பிவிட்டது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் பேசியதைத் தொடர்ந்து, அதிகாரம்கைவிட்டுப் போவதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரட்டைத் தலைமையே நீடிக்கும் என உறுதியாகச் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமியோ, தான் பொதுச் செயலாளர் ஆவதற்கான வேலைகளை ஜரூராக பார்த்து வருகிறார்.

தலைமை கிரீடம்
கடந்த ஒரு வாரமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் சமாதானப்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் மாறி மாறி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தரப்பினர் ஒற்றைத் தலைமை கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டைத் தலைமை தான் என விடாப்பிடியாக நிற்கின்றனர். ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி, தலைமைக் கிரீடத்தைச் சூட்ட திட்டமிட்டு வருகிறார்.

எதிர் திட்டம்
பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஈபிஎஸ் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சியில் மண்ணள்ளிப் போடும் வகையில், அதிமுக பொதுக்குழுவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும், பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என்று உறுதி அளித்தும் கையெழுத்திட்ட கடிதத்தை எடப்பாடி பழனிசாமி பெற்று வருகிறார்.

ஆதரவாளர்கள் பலம்
மேலும், ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்களையும் தனது பக்கம் இழுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்று வரை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேசராஜா விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று ஆதரவளித்துள்ளனர். இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பலம் குறைந்து வருகிறது.

மாஃபா பாண்டியராஜன்
ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளருமான மாஃபா பாண்டியராஜனும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்த மாஃபா பாண்டியராஜன் திடீரென எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
தர்மயுத்தம் காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சசிகலா கேங்கில் இருந்து வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் தற்போது வரை ஓபிஎஸ் ஆதரவாளராகவே இருந்து வந்தார். அவரும் இன்று எதிர் முகாமுக்கு கிளம்பியுள்ளது ஓ.பி.எஸ்ஸுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 2017ல் தனக்கு ஆதரவு கொடுத்த பலரும் இப்போது தன்னுடன் இல்லாததால் ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் தளர்ந்து போயிருக்கிறாராம்.

படுதா காலி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தற்போது ஒற்றைப்படை எண்ணிக்கையாக குறைந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோரும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர். ஆனாலும், தொண்டர்கள் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி வருகிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழு கூட்டம் நெருங்க நெருங்க, இன்னும் எத்தனை நிர்வாகிகள் ஈ.பி.எஸ் பக்கம் தாவுவார்களோ என்ற அச்சம், அவரது ஆதரவாளர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு தடை பெற தீவிரம்
இதனால், ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு எப்படியாவது தடை பெற்று விட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒரு நாளே இடையில் இருப்பதால், சட்ட வல்லுநர்கள் உடன் தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ் தரப்பின் சீனியர் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications