வார்த்தையை விடாதீங்க விஜய்.. எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தவெக, அதிமுக நிர்வாகிகள் இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. விஜய் விட்டால் தன்னுடைய மேக்கப் மேனுக்கு அரசு பதவி கொடுப்பார். அவர் எங்களை பற்றி பேசும்போது யோசித்து வார்த்தைகளை விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக கட்சி ஆரம்பித்தே 2 வருடங்கள் தான் ஆகிறது. அவர்களுக்கு ஏதாவது அனுபவம் இருந்தால் பரவாயில்லை. விவசாயிகளை பற்றி சிந்தித்தால் தானே காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி அவருக்கு என்ன தெரியும்.

மேக்கப் மேனுக்கு அரசு பதவி
விஜய் நடிகர் என்பதால் நடிகர்களை மட்டுமே சந்திக்கிறார். விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளர் தான் ஆலோசகராகவும் உள்ளார். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆட்சியில் முதலமைச்சரின் ஆலோசகராக அனுபவம் உள்ளவர்களை தான் நியமிப்போம். துறை செயலாளர் அல்லது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, அவரின் ஆலோசனைகளை கேட்போம். தவெக ஆட்சியில் நடப்பதை போல எங்கள் ஆட்சியில்லை.
சினிமாவில் புதுமை படைப்பதை இவர் அரசியலிலும் புதுமைப்படுத்துகிறார். சினிமாவில், அரசியலில் தனக்கு யார் யாரெல்லாம் உதவியாக ஆலோசனை செய்தார்களோ அவர்களுக்கு அரசு பதவி கொடுக்கிறார். ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக போட்டுள்ளார். எடிட்டருக்கும் ஏதாவது பதவி கொடுப்பார். விட்டால் இன்னும் கொஞ்ச நாட்களில் அவரின் மேக்கப் மேனுக்கும் அவர் ஏதாவது பதவி கொடுப்பார்.
வார்த்தை பத்திரம் விஜய்
எல்லாமே சினிமா ஆகிவிட்டது. சினிமா பின்னணி உள்ள அவரின் ஆதரவாளர்களுக்கு அரசு ஆலோசகர் பதவி. அரசியலையும், அரசாங்கத்தையும் கேலிக்கூத்தாக்கிவிட்டார். திமுக அதிமுக இணையும் என்று கட்டுக்கதை கட்டுகிறார்கள். மற்றவர்களின் கருத்துகளை எங்கள் மீது திணிக்க வேண்டாம். நாங்கள் சொல்வது தான் எங்கள் கட்சியின் இறுதியான நிலை. அதிமுக தொடங்கியதே தீயசக்தி திமுகவை எதிர்ப்பதற்காக தான். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது.
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் ஏன் வெளியேறினார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். விஜய் வகிக்கிற முதலமைச்சர் பொறுப்புக்கு தகுதியற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். விஜய் தான் களவாணி. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெகவில் இணைய வைத்தவர்கள் தான் களவாணி.
பஞ்ச் டயலாக் மட்டுமே
விஜய் உருப்படியாக எதையும் செய்யவில்லை. குற்றம் சொன்னவர்களை எல்லாம் தங்கள் கட்சியில் இணைத்துவிட்டு எப்படி தூய்மையான ஆட்சியை வழங்குவார்கள். விஜய் வெறும் பஞ்ச் டெய்லாக் மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசியலில் இப்போதுவரை இந்த நிலை இல்லை. பல விஷயங்களை ஓப்பனாக பேச முடியாது. தவெகவுக்கு பெரும்பான்மையாக ஆட்சியமைக்கவில்லை. இரவல் வாங்கி தான் ஆட்சி நடத்துகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications