சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 27ஆம் தேதி அன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : 2016 சட்டமன்றத் தேர்தலில் பணப் பட்டுவாடா செய்வதற்காக சேகர் ரெட்டியின் நிறுவனத்திடம் 7 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறி வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.
அதே நாளில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களை சொன்னாங்க.. இப்ப வரைமுறையே இல்லாம.. ஈபிஎஸ் ஆப்சென்டான நிலையில் திமுக அரசை விமர்சித்த வேலுமணி!
சேகர் ரெட்டி
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 2016ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 7 கோடி ரூபாயை அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியது தெரியவந்தது.
வேலுமணி கொடுத்த பணம்
இதையடுத்து 2017-18ஆம் நிதியாண்டில் தனக்கு 4 லட்சத்து 92 ஆயிரத்து 563 ரூபாய் மட்டுமே வருமானம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த கணக்கை மறு ஆய்வு செய்து, 7 கோடி ரூபாய்க்கு எந்த விளக்கமும் வழங்கவில்லை என கூறி வருமான வரித்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு வேலுமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேலுமணி வழக்கு
இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி 2017-18ஆம் நிதியண்டில் எஸ்.பி.வேலுமணியின் மொத்த வருமானம் 7 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரத்து 770 என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரி வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு
அந்த மனுவில், வருமான வரித் துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும், நடைமுறைகளையும் இயற்கை நீதியையும் பின்பற்றப்படவில்லை என்றும், அளித்த விளக்கத்தை முறையாக பரிசீலிக்கவில்லை என்றும் வருமான வரித்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ், வேலுமணியின் மனு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.