அடேங்கப்பா! “புரட்சி நாயகர் எடப்பாடியார்”.. எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் பட்டம் தந்த அதிமுக ஐடி விங்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனே எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் அவருக்கு புரட்சி நாயகர் என்ற பட்டத்தை கொடுத்து உள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இடையிலான ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த ஆண்டு மே மாதம் பூதாகரமாக வெடித்தது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவருக்கு சாதகமாக தீர்ப்பு அதில் கிடைத்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்தது. கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக அவர் பதவியேற்ற நிலையில், ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து பல்வேறு சட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக 10 நாட்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது.

இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், ஓபிஎஸ் தரப்போ அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது. அதே நேரம் மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிட இருக்கும் நிலையில் தன்னை உடனே அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்தது.
இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதுடன் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுக ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சிநாயகர் எடப்பாடியார்." என்று புதிய பட்டத்தை கொடுத்து உள்ளார்.












Click it and Unblock the Notifications