ஆளுநர் பேசும் போது முதல்வரை பேச விட்டிருக்கக் கூடாது.. அதிமுக எம்எல்ஏ முனுசாமி ஆவேசம்
சென்னை: ஆளுநர் பேசும்போது, முதலமைச்சரை பேச அனுமதித்திருக்கக் கூடாது என அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு உரிய பதிலடியை கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ஆளுநர் உரைக்கு சபாநாயகர் அப்பாவு தமிழாக்கம் செய்து முடித்தபிறகு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர்
அப்போது அவர் பேசத் தொடங்கியதுமே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். இதையடுத்து அங்கு என்ன நடக்கிறது என்பதை தனது தனிச் செயலாளரிடம் கேட்டு தெர்ந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக அவையை விட்டு வெளியேறிவிட்டார்.

தேசிய கீதம்
தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு சென்றது மரபு மீறலாகும் என தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால் ஆளுநர் உரையின் போது முதல்வர் பேசியிருப்பதுதான் விதிமீறல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இரங்கல் தீர்மானம்
இந்த நிலையில் நேற்றைய தினம் முன்னாள் எம்எல்ஏக்கள், திரை பிரபலங்கள், எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டதாகவும் அப்பாவு அறிவித்தார்.

3ஆவது நாள்
இந்த நிலையில் இன்றைய தினம் 3ஆவது நாளாக தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் பெண் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து அவையில் எடப்பாடி பழனிசாமி சுட்டி காட்டினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் உரைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசிய விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி அவையில் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில் பேரவையில் உரையாற்றிவிட்டு ஆளுநர் அமர்ந்தபிறகு முதல்வரை பேச அனுமதித்திருக்கக் கூடாது. ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானமும் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றார்.

தலைகுனிவாகி
இதற்கு அப்பாபு அளித்த பதில்: முதல்வர் பேசாமல் இருந்திருந்தால் மாநிலத்திற்கே தலைகுனிவாகி இருக்கும். ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வராமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கும். ஆளுநர் உரையில் இல்லாத அம்சங்களை பேசிய போது சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முயன்றனர்.

அமைதிப்படுத்திய முதல்வர்
அவர்களை முதல்வர் அமைதிப்படுத்தினார். அவையின் மாண்பை காப்பதில் உறுதியுடன் செயல்பட்ட முதல்வருக்கு பேரவையின் சார்பில் நன்றி. ஆளுநர் பேசும் போது குளறுபடிகள் இருந்தன. உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் கடமை. உள்ளே இருக்கும் வரிகளுக்கு அரசே பொறுப்பு. அவர் அதை கடந்து சென்றதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது.

கண்ணியம் தேவை
சட்டசபையில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல. ஆளுநர்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என எடுத்துக்காட்டும் வகையில் தீர்மானம் இருந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்எல்ஏக்கள் விதிமுறைகளை பின்பற்றி கண்ணியத்துடன் பேச வேண்டும் என அப்பாவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications