அடேங்கப்பா.. பாஜக தலைவர்களையே மிஞ்சிட்டாரே.. மோடிக்கு சப்போர்ட்.. கார்கேவுக்கு தம்பிதுரை பதிலடி!
சென்னை: இந்தியாதான் பிரதமர் மோடிக்கு குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு, அவரது வீட்டில் அடுத்த ஆண்டும் கொடியேற்றுவார் என்று மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து 10ஆவது ஆண்டாகப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டும் இங்கு வந்து தேசியக் கொடியை ஏற்றுவேன், அப்போது 10 ஆண்டுகால சாதனைகளை நாட்டு மக்களுக்கு பட்டியலிடுவேன் என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேபதிலடி கொடுத்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, "வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு நிச்சயம் அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார்.. ஆனால், அதை அவர் தனது வீட்டில் தான் ஏற்றுவார்" என்று கிண்டலாக பதில் அளித்தார்.
இந்நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் தம்பிதுரை.
தம்பிதுரை கூறுகையில், "பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்திய மக்கள்தான் அவரது குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில்தான் தேசியக்கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications