சசிகலாவை தற்காலிகமாகத்தான் பொதுச் செயலாளராக்கினோம்.. அவ்வளவுதான்.. ஓபிஎஸ் சரவெடி
சென்னை: சசிகலாவை பொதுச் செயலாளராக்கியது ஏன் என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் விளக்கியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பிரச்சினை முற்றி வரும் நிலையில் அவர் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலா இணைப்பு பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவெடுப்பார்கள். இதை ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. தேனி மாவட்ட தீர்மானமும் அப்படியானது தான். தொண்டர்கள் மனசஞ்சலம் படக்கூடாது என்பதால் தான் எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்தேன். ஜெயலலிதா காலமாகிவிட்ட காரணத்தால், தற்காலிக ஏற்பாட்டில் கட்சியை வழிநடத்த சசிகலா அவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினோம். அவ்வளவு தான்.

ஜெயலலிதா
மற்றபடி, ஜெயலலிதாவை தவிர அதிமுகவில் யாரும் பொதுச் செயலாளராக முடியாது. எனவே இரட்டை தலைமைதான் அதிமுகவில் தொடர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்த போது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை.

தொண்டர்களுக்காகவே
தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்பட வேண்டும். அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் அப்பதவியை கொண்டு வந்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

உள்கட்சித் தேர்தல்
அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு பொதுக் குழுவில் வைக்க வேண்டும் என்ற மரபுக்காகவே கூட்டம் நடத்தினோம். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு இருவரின் ஒப்புதலும் தேவை. எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா?

புதிய பிரச்சினை
நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை. பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக் கூடாது. ஒற்றை தலைமை வேண்டும் என்கிற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிரவாகி மூர்த்தி. என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications