மக்கள் தீர்ப்பும்; திமுக மீதான அதிமுகவின் குற்றச்சாட்டும்; தோல்விக்கான காரணத்தை ஆராய்வது எப்போது..?
சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறையும், ஜனநாயக அக்கிரமங்களும் நடந்ததால் தான் அதிமுக தோல்வியை தழுவியதாக கூறியிருக்கிறது அக்கட்சியின் தலைமை.
உட்கட்சியில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் சூழலில், தோல்விக்கான காரணத்தை உரிய மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்களை அழைத்து விசாரிக்காமல் வழக்கமான குற்றச்சாட்டு அரசியலையே அதிமுக தலைமை முன்னெடுத்திருக்கிறது.
எதனால் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டது, பிரச்சாரத்தில் எதை முன்னிறுத்தவில்லை என்பது குறித்தெல்லாம் அதிமுக தலைமை இதுவரை ஆலோசித்ததாக தெரியவில்லை.

கைப்பாவை
தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டதால் தான் அதிமுக தேர்தலில் தோற்க நேட்ரிட்டதாக காரணம் கூறியிருக்கிறது அதிமுக தலைமை. அரசியலுக்கே உரிய வழக்கமான குற்றச்சாட்டு அறிக்கை தான் அதிமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளதே தவிர, மக்கள் தீர்ப்பு குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

காவல்துறை
காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக செயல்பட்டு வருவதாக கூறியிருக்கும் அதிமுக இரட்டை தலைமை, அதிமுகவினரை பொய் வழக்குகளால் அச்சுறுத்தி தேர்தல் பணி செய்யவிடாமல் முடக்கப்பட்டதாக புகார் கூறியிருக்கிறது. காவல்துறைக்கு அஞ்சி அதிமுகவினர் தேர்தல் பணிகளிலிருந்து ஒதுங்கினார்களா அல்லது மாஜி அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் கண்டு கொள்ளாததால் ஒதுங்கினார்களா என்பதையும் விசாரித்து அறிந்துகொள்ள வேண்டிய கடமை அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

வன்முறை
வன்முறைகளை திமுக கட்டவிழ்த்து விட்டதாக கூறும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்., அவ்வாறு வன்முறையை கட்டவிழ்த்து விடும்போதே அதை ஏன் தடுக்கவில்லை அல்லது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றும் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்., இதற்காக களத்தில் இறங்கி உடனடியாக ஒரு போராட்டம் நடத்தியிருந்தால் அவ்வாறு நடந்ததை தடுத்திருக்கலாம் அல்லவா.

மகேசன் தீர்ப்பு
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என எடுத்துக்கொண்டு தோல்விக்கான காரணங்களை தீர்க்கமாக ஆரய்ந்து, அமர்ந்து பேசி ஒரு முடிவெடுத்தால் மட்டுமே அடுத்து வரும் நகராட்சி தேர்தலில் அதிமுகவால் வெற்றியை அறுவடை செய்ய முடியும். இதே நிலை நீடித்தால், அடுத்து வரும் தேர்தல்களிலும் இதே போன்று முடிவுகள் வெளிவந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.












Click it and Unblock the Notifications