எகிறி அடிக்கும் திமுக.. அமைச்சரை மனம் திறந்து பாராட்டிய அதிமுக மாஜி.. காரணம் என்னன்னு பாருங்க
சேகர்பாபுவை மனம்திறந்து பாராட்டி உள்ளார் வைகைசெல்வன்
சென்னை: "நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து உணவருந்தி சமூக நீதியை காத்த அமைச்சர் சேகர்பாபு பாராட்டுக்குரியவர்" என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் அதிரடியாக அறிவித்து வருகிறது-. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இந்த துறையிலும் இவ்வளவு அதிரடிகள் செய்ய முடியுமா? என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற அறிவிப்புகளின் வரிசையில் 754 திருக்கோயில்களில் கோயிலுக்கு வழிபட வரும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பந்தி
அந்த வகையில், மாமல்லபுரம் அருகே ஸ்தலசயனப் பெருமாள் கோயில் உள்ளது.. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலிலும் அன்னதான திட்டத்தின் கீழ் 100 பேருக்கு தினமும் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு நரிக்குறவ பெண்ணான அஸ்வினி என்பவர் இந்த கோயிலில் சாப்பிட போயுள்ளார். ஆனால், நரிக்குறவ பெண்ணை அங்கிருந்த சிலர் பந்தியில் உட்கார கூடாது, மிச்சம் மீதி இருந்தால் போடுகிறோம், ஒரு ஓரமாக போய் உட்காரு என்று சொல்லி அவமானப்படுத்தியதாக தெரிகிறது.

ஆதங்கம்
தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை சில தினங்களுக்கு முன்பு ஒரு டியூப் சேனலில் பேட்டியாக அஸ்வினி தந்திருந்தார்.. "நாங்களும் மனுஷங்கதானே? நரிக்குறவர் சமூகம் என்பதால் பொது இடத்தில் எங்களை அவமானப்படுத்துவதா? நாங்க மட்டும் படிச்சிருந்தால், நன்றாக டிரஸ் போட்டிருந்தால், இப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுவோமா? எங்களுக்கும் ஒரு காலம் வரும்" என்று அஸ்வினி பேசிய பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

சேகர்பாபு
இந்நிலையில், கோவில் அன்னதான பந்தியில் புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினியுடன் அமர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு சாப்பிட்டார்.. சிறப்பு சமபந்தி விருந்தாக பரிமாறப்பட்ட சாதம், வடை, பாயசம், கூட்டு என, நரிக்குறவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவு உண்டார்.. அவர்களுக்கு புத்தாடை வழங்கினார்.

மகிழ்ச்சி
அமைச்சரின் இந்த செயல் பலருக்கும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பந்தியில் உணவு வழங்கவில்லை என்று நரிக்குறவ பெண்ணின் ஆதங்கத்தை கண்டேன்.. முதல்வரின் கவனத்துக்கும் இதை கொண்டு சென்றேன்.. அந்தப் பெண் உட்பட அனைவருடன் அமர்ந்து உணவு அருந்தினேன்" என்று கூறியிருந்தார்.

அமைச்சர்
அமைச்சர் நரிக்குறவ பெண்ணுடன் உட்கார்ந்து உணவு சாப்பிட்ட போட்டோ சோஷியல் மீடியாவில் பரவி கொண்டு இருக்கிறது.. இதற்கு பலரும் பாராட்டி வரவேற்று உள்ளனர்.. அந்த வகையில், அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வனும் இந்த செயலை பாராட்டி உள்ளார்.. "நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த மாண்புமிகு இந்து அறநிலைத் துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பாராட்டத்தக்கவர்" என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

சமூக நீதி
என்னதான் எலியும் பூனையுமாக அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் நலன் என்று வந்துவிட்டால், அதிலும் சமூகநீதி என்று வந்துவிட்டால், இரு தரப்புமே கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் வைகைச்செல்வனின் இந்த மனம்குளிரும் பாராட்டு..!












Click it and Unblock the Notifications