"உருப்படவே உருப்படாது.. பாஜக தொட்ட அதிமுக அடுத்து 5 ஆண்டுகளில் இருக்காது.." ப.சிதம்பரம் தாக்கு
சென்னை: சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாஜக கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், பாஜக புகுந்த நாடும், அரசும் உருப்படாது என்று தாக்கிய அவர், பாஜக தொட்ட அதிமுக அடுத்து 5 ஆண்டுகளில் இருக்காது என்று அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒரு பக்கம் கூட்டணி, தொகுதிப் பங்கீடு கணக்குகள் வேகமாக நடந்து வருகிறது. மற்றொரு புறம் பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக- காங்கிரஸ்
தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் இடையே முதலில் தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் இருந்தது. இருப்பினும், அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு நேற்றைய தினம் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ இடங்களும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இது கடந்த 2021 காங்கிரஸ் போட்டியிட்ட 25 இடங்களை விட அதிகம்.
இதற்கிடையே சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பாஜக கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பாஜக புகுந்த நாடும், அரசும் உருப்படாது என்று அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.
பாஜகவை தோற்கடிக்க வேண்டும்
தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் தமிழைக் காப்பாற்ற வேண்டும்.. நாம் தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அவர்கள் நுழையவே முடியாத அளவுக்கு நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அதிமுக
இப்போது தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நமக்குத் தெளிவாக அணிகள் தெரிகிறது.. திமுக தலைமையில் ஒரு மாபெரும் அணி, மகா கூட்டணி உருவாகி இருக்கிறது. மறுபுறம் அதிமுக அஞ்சி அஞ்சி அமித் ஷா மடியில் உட்கார்ந்து இருக்கிறது. அது பாஜகவின் கூட்டணி. இந்த தேர்தலில் திமுக கூட்டணி vs பாஜக கூட்டணி என்பதே மோதல். இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வேலையே கிடையாது. அதிமுக இனி சுவாஹா தான்.. அதிமுகவில் இருக்கும் கொஞ்சப் பேரையும் கபளிகரம் செய்துவிடுவார்கள்.
அதிமுகவால் இனி நீண்ட காலம் நிலைக்க முடியாது. எப்போது அவர்கள் பாஜகவின் அரவணைப்பிற்குச் சென்றார்களோ அவ்வளவு தான். இனி அவர்களால் ரொம்ப நாட்களுக்கு இருக்க முடியாது. எனவே, இந்த தேர்தல் திமுக vs பாஜக தான்.
பிரச்சாரம்
திமுகவினர் 4 மாதங்களாகத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீதி வீதியாகப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக திமுக மகளிர் அணியினர் வீடு வீடாகவே செய்கிறார்கள். இதே வேகம் அடுத்த 40 நாட்களுக்கு இருக்க வேண்டும். கொஞ்சமும் தளர்ச்சி இல்லாமல் 40 நாட்கள் இதே வேகத்தைக் காட்டினால் பிறகு மீண்டும் திமுக கூட்டணி வெல்லும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்வார். தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.












Click it and Unblock the Notifications