”எடப்பாடியார் வழியில் வீறுநடைபோடும் தொண்டர்கள்” - அட அதிமுகவின் டிவி சேனலே சொல்லுது பாருங்க
சென்னை: "எடப்பாடியாரின் வழியில் வீறுநடை போட காத்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள்" என்ற தலைப்பின் கீழ் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜே விவாத நிகழ்ச்சியை நடத்துகிறது.
Recommended Video
சென்னை வானகரத்தில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

தலைவர்கள் சந்திப்பு
அதனை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளுக்கு பின்னர் இரு தலைவர்களையும் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழுவை தடுக்கும் ஓ.பன்னீர்செல்வம்
கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருப்பதால் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை நடக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வந்தது.

ஓ.பி.எஸின் கடிதங்கள்
தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் பொதுக்குழுவில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஓ.பி.எஸ் இன்று கடிதம் எழுதினார்.

வழக்கு விசாரணை
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸ் ஜே செய்தி
இதற்கிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக நியூஸ் ஜேவில் "எடப்பாடியாரின் வழியில் வீறுநடை போட காத்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள்" என்ற தலைப்பின் கீழ் விவாத நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சி.வி.சண்முகத்தின் சகோதரரின் மேற்பார்வையில் நடத்தப்படுவதாக கூறப்படும் இந்த தொலைக்காட்சியில் எப்போதெல்லாம் இரு தரப்பு மோதல் வெடிக்கிறதோ அப்போதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே செய்தி வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications