கூடா நட்பு கோர்ட்டில் முடியும்... கொக்கரிக்கும் நமது அம்மா இதழின் சித்ரகுப்தன்!
சென்னை : டிடிவி. தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு படு உற்சாகத்தை அளித்துள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் தினகரனை நம்பிப் போன 18 எம்எல்ஏக்களுக்கு நாசமாய்ப் போனார்கள் என்பதை விவரிக்கும் விதமாக கூடா நட்பு கோர்ட்டில் முடியும் என்ற தலைப்பில் சித்ரகுப்தன் கவிதை வெளியாகியுள்ளது.
நமது அம்மா இதழில் 18 எம்எல்ஏக்கள் குறித்து வெளியாகியுள்ள கவிதையில் கூறியுள்ளதாவது : மாஃபியாவை நம்பி மகராசி இயக்கம் விட்டு முறை தவறி போனவர்கள் முச்சந்தியில் நிற்கிறார்கள் முகவரியற்று முடிகிறார்கள்.

எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் தான் ஆளும் என்கிற வங்கத்து கடலோரம் உறங்குகிற வழித்துணை தெய்வத்தின் வாக்குகளுக்கு எதிராக வழி மாறிப்போனவர்கள் போக்கற்று போனார்கள் புதை குழியில் விழுந்தார்கள். தறுதலையை நம்பி இலை கொண்ட இயக்கம் விட்டு தடம் மாறிப் போனவர்கள் நட்டாற்றில் நிற்கிறார்கள், நல்வாழ்வு இழக்கிறார்கள்.
தெய்வத்தாய் இயக்கம் விட்டு திகார்ராரோடு திசை மாறிப் போனவர்கள் திக்கற்று நிற்கிறார்கள். அரசியலில் வக்கற்று முடிகிறார்கள். புரட்சித் தலைவரின் இயக்கத்தை அழிக்க பொல்லாங்கு கும்பலோடு சல்லாபம் செய்தவர்கள் புரிந்த பாவம் தொலைக்க புஷ்கரணி சென்று தாமிரபரணியில் குளித்தாலும் கழகத்துக்கு இழைத்த துரோகத்தை கழிக்கவே முடியாது என்பதால் திரித்த பால் ஆனார்கள். திவாலாகிப் போனர்கள்.
அண்ணா திமுக என்னும் ஆலயத்தை விட்டு ஆமமூக்கன் கட்சிக்கு ஆதாயத்துக்குப் போனவர்கள் அந்தரத்தில் நிற்கிறார்கள், அரசியல் அநாதைகள் ஆகிறார்கள். சந்தனமாய் கரைந்து உழைத்திட்ட வெள்ளந்தி தொண்டர்களை உதாசீனம் செய்துவிட்டு சாத்தானோடு போனவர்களை சட்டமே முடித்தது. துரோகம் நிலைக்காது என்பதை சரித்திரமாய் உரைத்தது. சத்யநாராயணன் தீர்ப்பு சாஸ்வதமாய் நிலைக்குது. நல்லாட்சி நடத்தி அதனை நயத்தோடு மக்களிடம் நாடறிய உரைத்து உடல் குன்றிய நிலையிலும் உயிருருக ஊரெங்கும் ஒலித்திட்ட அம்மாவின் செல்வாக்கால் அடையாளம் பெற்றவர்கள் நன்றிதனை கொன்று நயவஞ்சகத்தோடு சென்றார்கள். நாசமாகிப் போனார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications