3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து நேரடி ஹஜ் பயணம்! வழியனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
சென்னை: 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் Jeddah நகருக்கு நேரடி விமானம் இயக்கப்படும் நிலையில் ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி படைத்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கான கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் துல்ஹஜ் மாதத்தில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கில் மக்கா நகரில் குவிவார்கள்.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்களும் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ் யாத்திரை புறப்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் Jeddah நகருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவில்லை.
இதையடுத்து இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதி ஒரு வழியாக இந்தாண்டு சென்னையிலிருந்து நேரடி ஹஜ் விமானத்தை இயக்க வைத்திருக்கிறார். நேற்று முதல் வரும் 21ஆம் தேதி வரை சென்னையிலிருந்து ஹஜ் விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் புறப்பட்ட முதல் குழுவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக ஹஜ் பயணிகள் சிரமமின்றி மெக்கா மதினா பயணத்தை முடித்துக்கொண்டு நல்லபடியாக தாயகம் திரும்ப வேண்டும் என சிறப்பு துஆ நிகழ்வும் நடைபெற்றது..












Click it and Unblock the Notifications