வரலாறு திரும்புகிறது! மீண்டும் மக்கள் சந்திப்பு பயணம் புறப்படும் ராமதாஸ்! பாமக அறிவிப்பு!
சென்னை: 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பு பயணம் புறப்படுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு;
தமிழ்நாட்டில் மக்களைத் தேடித் தேடிச் சென்று சந்தித்த முதல் மற்றும் ஒற்றைத் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். வன்னியர் சங்கம் தொடங்கிய காலம் முதல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவர் அய்யா அவர்களின் மக்கள் சந்திப்பு என்பது வரலாறு ஆகும்.

காலை 10 மணிக்கு தொடங்கும் மருத்துவர் அய்யா அவர்களின் மக்கள் சந்திப்பு அதற்கு அடுத்த நாள் காலை 6.00 மணி வரை நீளும். உணவுக்கான நேரம் என்பதெல்லாம் கிடையாது. எங்கேனும் பொதுமக்கள் தருவது தான் மருத்துவர் அய்யா அவர்களின் உணவு ஆகும். பல நேரங்களில் அது பழைய சாதமாகவோ, கஞ்சியாகவோ, கூழாகவோ கூட இருக்கும். உறக்கம் கூட இல்லாமல் 20 மணி நேரத்திற்கும் கூடுதலாக மக்கள் சந்திப்பு தொடரும்.
மருத்துவர் அய்யா அவர்களின் மக்கள் சந்திப்புக்கு பெரிய ஏற்பாடுகள் எதுவும் தேவைப்படாது. முதன்மைச் சாலையில் தொடங்கி மக்கள் சந்திப்பு நடக்கும் கிராமத்திற்கு மருத்துவர் அய்யா அவர்கள் வயல்வெளிகளை கடந்து நடந்து வருவார். கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு ஸ்டூல் , ஒரு மைக் இருக்கும். வெளிச்சத்திற்காக பெட்ரோமாக்ஸ் அல்லது அரிக்கேன் விளக்கு ஒன்று இருக்கும்.
இது தான் மருத்துவர் அய்யா அவர்களின் கூட்டத்திற்கான ஏற்பாடு ஆகும். பல கி.மீ தொலைவுக்கு நடந்தே வரும் மருத்துவர் அய்யா அவர்கள், ஸ்டூல் மீது ஏறி நின்று உரையாற்றுவார். கொடி ஏற்றி வைப்பார். மருத்துவர் அய்யா அவர்களின் வருகைக்குப் பிறகு அந்த கிராமம் புத்தெழுச்சி பெற்றிருக்கும். இது தமிழகத்தின் அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த வரலாறு. அந்த வரலாறு இப்போது மீண்டும் திரும்புகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் எப்படி எளிமையாகச் சென்று மக்களை சந்தித்தாரோ, அதே போல் மீண்டும் மக்களைச் சந்திக்கவிருக்கிறார். அத்தகைய முதல் மக்கள் சந்திப்பு கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பத்தில் இன்று (02.12.2023) மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
திண்ணைப் பரப்புரை முறையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் விதித்துள்ள முதல் கட்டுப்பாடு, கூட்டம் மிகவும் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்பது தான். கூட்டத்திற்காக மேடை அமைக்கப்படக் கூடாது. தரையில் ஒரு மேசையும், மூன்று நாற்காலிகளும் மட்டுமே போடப்பட வேண்டும். அதில் மருத்துவர் அய்யாவும் விருந்தினர்களும் அமர்வார்கள்.
மக்கள் அமர்வதற்கும் நாற்காலிகள் கிடையாது.. தார்ப்பாய்கள் தான். அலங்கார விளக்குகள் எதுவும் அமைக்கப்படக் கூடாது, தெருவிளக்கு வெளிச்சத்தில் தான் கூட்டம் நடைபெறும். கூட்டத்திற்கான துண்டறிக்கையில் மருத்துவர் அய்யா அவர்கள் உள்ளிட்ட எந்தத் தலைவரின் படமும் இடம் பெறாது. வன்னியர் சங்கத்தின் இலட்சினையான அக்கினி கலசம் மட்டும் தான் இடம் பெற்றிருக்கும்.
கூட்டத்திற்காக மருத்துவர் அய்யா அவர்களை வரவேற்று பதாகைகளோ, சுவரொட்டிகளோ ஒட்ட கூடாது என்பது மருத்துவர் அய்யா அவர்களின் இன்னொரு கட்டுப்பாடு. இப்படியாகத் தான் வரலாறு திரும்புகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா அவர்கள் நடத்திய திண்ணை பரப்புரைகள் எவ்வாறு இருக்கும் என்பதை அறியாதவர்கள், அதை தெரிந்து கொள்ள பச்சையாங்குப்பம் கூட்டம் ஒரு வாய்ப்பு. இத்தகையக் கூட்டங்களை தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக்கிறார் மருத்துவர் அய்யா அவர்கள். வரலாறு திரும்புவது மட்டுமின்றி புதிய வரலாறுகளும் படைக்கப்படட்டும்.












Click it and Unblock the Notifications