கூட்டணி பற்றி பேசாதீங்க.. அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக தலைவர்கள் யாரும் கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதிமுகவினர் பூத் கமிட்டி பணிகளை சரியாகப் பார்த்தலே போதுமானது என்றும், கூட்டணி பிரச்சனைகளை தாம் பார்த்துக் கொள்வதாகவும் பேசி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையன், ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் கைகோர்த்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூட்டணி தொடர்பான பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதனைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அது தானாகவே நடக்கும். அதேபோல் கூட்டணி பற்றி எந்தவொரு கருத்தையும் யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாகப் பார்த்தலே போதுமானது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி இருக்கிறது. வரும் நாட்களில் பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகம் எதிர்பார்த்த தவெக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று பார்க்கப்படுகிறது.
தவெகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. இதனால் அதிமுகவின் அழைப்பை விஜய் நிராகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாகவே விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் பேசி வந்தனர்.
இதனால் அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தேவர் ஜெயந்தியன்று எடப்பாடி பழனிசாமி, அதிமுக - தவெக இடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார். இதன்பின் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அமைதியாகினர். அதேபோல் விஜய் தொடர்பாகவும் பேசுவதை நிறுத்தினர். இதனால் எடப்பாடி பழனிசாமி தவெக கூட்டணி தொடர்பாக பேச வேண்டாம் என்பதையே மறைமுகமாக அறிவுறுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications