ஜெயலலிதா, அண்ணாவை விடுங்க.. அதிமுக- பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமே வேறு.. கொளுத்தி போட்ட பிரஸ்மீட்
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி முறிய தமிழக பாஜக தலைவர் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, அண்ணா துரையை விமர்சித்திருந்ததை தாண்டி வேறு காரணம் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக- பாஜக இடையே கடந்த ஓராண்டாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடந்த தீர்மானங்களை மூத்த தலைவர் கே.பி. முனுசாமி வாசித்தார்.

அப்போது அவர் கூறுகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக மாநிலத் தலைமை கடந்த ஒரு ஆண்டு காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும் எங்கள் கழக தெய்வங்களான அண்ணா, ஜெயலலிதா மீதும் அவதூறாக பேசியும் எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
எனவே அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிக் கொள்கிறது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முனுசாமி தெரிவித்தார். அதிமுக கூட்டணி முறிவுக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா , அண்ணாதுரையை விமர்சித்திருந்ததை தாண்டி வேறு ஒரு பிரச்சினைத்தான் இந்த முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
அதாவது ஜெயக்குமார் கூட்டணி இல்லை என்றும் பின்பு பேசிய செல்லூர் ராஜூ அதிமுக- பாஜக கூட்டணியில் பிரச்சினை இல்லை என கூறியதுடன் மேலும் குறிப்பிட்ட ஒரு கருத்தே கூட்டணி முறிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில் பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. திமுகவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். மோடி மீண்டும் பாரத பிரதமராக வருவார்., தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வரவேண்டும், பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் அண்ணாமலையும், அதிமுகவுடன் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கூறியிருந்தார். செல்லூர் ராஜூ அண்ணன் கூறியது போல் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். ஆனால் தமிழக முதல்வராக எடப்பாடி வருவார் என நான் எப்படி கூற முடியும்., இதை தேசிய தலைமைதான் சொல்ல வேண்டும். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என கூறி நான் தலைவர் பதவிக்கு வந்துள்ளேன், அப்படியிருக்கும் போது வேறு ஒருவர் அடுத்த முதல்வர் என நான் எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்படும் என அதிமுகவினர் காத்திருக்கும் நிலையில் அண்ணாமலையோ அதை எப்படி நான் சொல்ல முடியும் என கேட்டிருந்ததே கூட்டணி முறிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரானதும் தனது செல்வாக்கை நிரூபிக்க வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி முன்னிறுத்தப்படவுள்ள நிலையில் அண்ணாமலை கூறிய கருத்து அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத பாஜகவே அவர்களுடைய கட்சியை ஆட்சியில் அமர்த்த முற்படும்போது நாம் ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என நிர்வாகிகள் பலர் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications