ஹைகோர்ட் தீர்ப்பு- பறிபோகுமோ அதிமுக? பதறும் எடப்பாடி பழனிசாமி! உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட முடிவு!
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருப்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை ரொம்பவே ஆடிப்போக வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தொடர்பாக எடப்பாடி தரப்பு தீவிர சட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உட்பட உட்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், உட்கட்சி விவகாரங்களை உரிமையியல் நீதிமன்றங்கள் விசாரித்தாலும் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படிதான் விசாரித்தது என பதிலளித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது; மேலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது. இது எடப்பாடி பழனிசாமி தரப்பை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரு கட்சியின் உள் விவகாரங்களை தேர்தல் ஆணையம் எப்படி விசாரிக்க முடியும்? இல்லாத ஒரு அதிகாரத்தை இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான சிவி சண்முகம் எம்பி உள்ளிட்டோர் வாதிடுகின்றனர்.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கேசி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் இனி தேர்தல் ஆணையமே அனைத்தையும் முடிவு செய்யும்; நீதியின் கண் திறந்துவிட்டது என மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது சின்னம் தொடர்பான விவகாரங்களைத்தான் தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியும்; பொதுச்செயலாளர் பதவி போன்றவற்றை உரிமையியல் நீதிமன்றமே விசாரிக்க முடியும்; தேர்தல் ஆணையம் எப்படி இதனை விசாரிக்க முடியும் என்கிற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து தடை பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையை சட்ட வல்லுநர்கள் எடப்பாடி தரப்பிடம் தெரிவித்துள்ளனராம். இதனால் உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கதவுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தட்டும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications