இரட்டை இலை முடங்கும்.. ஒற்றைத் தலைமை வந்தால் அதிமுகவுக்கு சிக்கல் - ஓ.பி.எஸ் தரப்பு பரபர கடிதம்!
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரின் பரபரப்பு கடிதம் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு 60 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு ஓ.பி.எஸ் தரப்பு வழங்கிய கடிதத்தில், சட்ட விதிகளைத் திருத்தி, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என்றும், ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இரட்டைத் தலைமை பதவிக்காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் தேர்தல் ஆணையத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டால் சட்ட ரீதியாக என்னென்ன சிக்கல்கள் எழும் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு 4 பக்க கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 11 அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டைத் தலைமையின் பதவிக்காலம் முடிவதற்குள் பொதுக்குழுவால் எந்த மாற்றமும் செய்ய முடியாது தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை கொண்டு வரப்பட்டால் இரட்டை இலைச் சின்னமே கேள்விக்குறியாகும் என்றும், தமிழகம் முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தும் தூண்டுகோலாக அமைந்துவிடும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.