எக்குத்தப்பாய் எகிறும் பிரஷர்..அதிமுகவில் உருவான புரட்சி படை! எடப்பாடியை ரவுண்டு கட்டும் சீனியர்கள்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கோட்டையனை தொடர்ந்து மேலும் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருப்பதாகவும், தற்போது அவர்கள் ஒரு அணியாக சேர்ந்து மீண்டும் சசிகலா உள்ளிட்டோரை கட்சிக்குள் அழைத்து வரவேண்டும் என போர்க்கொடி தூக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை பல தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. கட்சியிலிருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வெளியேற்றப்பட்டதால் அதிமுக பலவீனமாக காட்சியளிக்கிறது.
இதை வைத்து எதிர்க்கட்சியினரும் அதிமுகவை பலவீனமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் சசிகலா, ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சிக்குள் வந்தால் தொண்டர்கள் பலமும் நிர்வாகிகள் பலமும் மேலும் அதிகரிக்கும். எனவே அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று எஸ்பி வேலுமணி வலியுறுத்தினராம். ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படவில்லை இந்நிலையில் அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லை எனக் கூறி செங்கோட்டையன் பிரச்சனை செய்தார்.
தொடர்ந்து அந்த விவகாரம் தான் ஒரு வாரத்திற்கு பேசுபொருளாக இருந்தது. ஆனால் வழக்கம் போல அமைதியாக கடந்து விட்டார் எடப்பாடி. மேலும் செங்கோட்டையனும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியில் தொடர்ந்து எதிர்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும் சில சீனியர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஓரம் கட்ட திட்டம் தீட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் தனி அணியாகவே செயல்படுவதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த இரு மூத்த முன்னாள் அமைச்சர்கள், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் சட்டத்துறை அமைச்சர், தென்மாவட்டங்களை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மீண்டும் சசிகலாவை கட்சிக்குள் கொண்டுவர அவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கும் நிலையில் அவரும் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ் தரப்பை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சசிகலா தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்துள்ள நிலையில் அவர்களை சமாதானம் செய்ய திட்டமிட்டு வருகிறார். இது ஒரு புறம் இருக்க தனக்கான ஆதரவு அலை அதிமுகவில் உருவாகி இருப்பதைக் கண்டு சசிகலாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தனது விசுவாசிகள் கட்சியில் இருக்கும் நிலையில் அவர்களை வைத்து எடப்பாடிக்கு நெருக்கடியை அதிகரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications