2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனி கூட்டணி அமைக்கும்! எடப்பாடி பழனிச்சாமி துணிச்சல் முடிவு! பாஜக ஷாக்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது.

அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த கூட்டணி முறிந்துள்ளது. 30 நிமிடம் நடந்த மீட்டிங்கிற்கு பின் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது.
அதோடு லோக்சபா 2024 தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. புதிதாக கூட்டணி அமைப்போம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா பெரியார் போன்றவரை தொடர்ந்து அவமதித்தும்,கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியும்,அதிமுக கட்சியை அவமானப்படுத்தும் வகையில் பேசியதும் பாஜக மாநில தலைமை தொடர்ந்து செய்து வருகிறது, என்று அண்ணாமலைக்கு எதிராக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், பாஜக உடன் கூட்டணி இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை. பாஜகவில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் இன்று முதல் அதிமுக விலகிக்கொள்கிறது. நாங்கள் தனியாக கூட்டணி அமைப்போம்., என்று அறிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?: அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இதுவே இரண்டு தரப்பு மோதலுக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications