முதல்வர், விஜயகாந்த் தனித்தனியாக தீவிர ஆலோசனை.. அதிமுக-தேமுதிக கூட்டணி இழுபறி நீடிப்பு
Recommended Video
சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு, அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் விஜயகாந்த்துடன், அவரது இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
தங்கமணி, வேலுமணி ஆகிய இரு அமைச்சர்களும்தான் பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய குழுவில் முக்கியமானவர்கள். பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணியை இறுதி செய்ததில், இந்த அமைச்சர்களின் பங்கு முக்கியமானது.
ஆனால் தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி முடிவடையாமல் உள்ளது. தேமுதிக அதிக தொகுதிகளை கேட்பதும், தமிழ் மாநில காங்கிரஸ் மயிலாடுதுறை தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று கேட்பதும் தான் இந்த கூட்டணியில் இழுபறிக்கு காரணம்.
இது தொடர்பாகத்தான் முதல்வருடன் இறுதிகட்ட ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்தில், அவர் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். தேமுதிக, தேர்தல் குழு பொறுப்பாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் இதில், பங்கேற்றுள்ளனர். எனவே, இன்றே தேமுதிகவுடனான கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை அதிமுக எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன. தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்குமா, இல்லையா என்பது இன்றோ, நாளையோ தெரிந்துவிடும்.