சல்லி சல்லியாக.. நொறுங்கிய அதிமுக.. எடப்பாடிக்கு சிக்கல் மேல் சிக்கல்.. அப்போ திமுக ரூட் கிளியர்?
சென்னை: அதிமுகவிற்கு உள்ளேயும்.. அதிமுக கூட்டணிக்குள்ளும் கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு சாதகமாக அதிமுகவில் பல மோதல்கள் நடக்க தொடங்கி உள்ளன.
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தனது கோரிக்கைகளை பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் என கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும். அதை கழகத்தின் பொதுச்செயலாளர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், 2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்று செங்கோட்டையன் கூறி உள்ளார்.
செங்கோட்டையன் நீக்கம்
இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கோட்டையனிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்காமல் கட்சி பொறுப்புகளை நீக்கி உள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது டிடிவி தினகரனும் பிரிந்துள்ளது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து டிடிவி தினகரன் மதுரையில் அளித்த பேட்டி ஒன்றில், மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தோம். நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்லும். கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் இல்லை. தொண்டர்களின் முடிவுகளின் காரணமாகவே வெளியேறினோம். பாஜக கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு வெளியேறவில்லை.
பாஜகவில் இருந்து விலகுவது என்பது நாங்கள் நிதானமாக எடுத்த முடிவுதான். தேசிய ஜனநயாக கூட்டணியை அண்ணாமலை நல்ல முறையில் கையாண்டார். ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்காத விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் கொடுத்த பதில் மிகவும் ஆணவமிக்கது. பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினாரின் செயல்பாடுகளே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் குழப்பம்
இப்போது அதிமுக கூட்டணியிலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2019, 2015 லோக்சபா தேர்தல்களில் அதிமுக தென் மண்டலத்தில் கடுமையான சரிவை சந்தித்தது. முக்குலத்தோர் ஆதரவு வாக்குகள் இல்லாத காரணத்தால் கடுமையான சரிவை எடப்பாடி சந்தித்தார். அதை மேலும் உறுதி செய்யும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மண்டல அரசியலில் தற்போது நடந்துள்ளது.
அதிமுகவிற்கு பெரிய சிக்கல்
முன்னதாக அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். இவர் திமுகவில் ஐக்கியம் ஆகிவிட்டார்.
ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
திமுகவிற்கு சாதகம்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இவரின் வெளியேற்றமும் தென் மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக இருக்கும். இப்படி கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் நடந்த தொடர் சம்பவங்கள் அதிமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக மாறி உள்ளது. முக்கியமாக தென் மண்டலத்தில் அதிமுக அஸ்திவாரம் போடும் முன்பே.. அங்கே மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications