டெல்டா அதிமுகவில் உட்கட்சி பஞ்சாயத்து.. தவறாகும் எடப்பாடியின் கணக்கு.. அடித்து ஆடும் கே.என்.நேரு!
திருச்சி: டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமியின் கணக்கு தவறாகும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்காததால், அவரும் மனக்கசப்பில் இருப்பதாக அக்கட்சியினர் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முறை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள் மட்டுமல்லாமல் டெல்டாவில் அதிமுக அதிகளவில் வெல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார்.

ஆனால் கடந்த சில தேர்தல்களாகவே டெல்டா மண்டலம் திமுகவின் கோட்டையாக மாறி வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் என்று மொத்தமாக 20 தொகுதிகள் உள்ளது. இந்த 20 தொகுதிகளில் இருந்து 2021 சட்டசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் மற்றும் ஓஎஸ் மணியன் ஆகிய மூவர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
இந்த முறை இந்த 20 தொகுதிகளையும் கைப்பற்றி டெல்டா மாவட்டங்கள் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தீவிரமாக பணியாற்றி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் சிக்கி இருக்கிறது. இந்த உட்கட்சி பூசல் நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
ஆனாலும் இதனை தீர்க்க எடப்பாடி பழனிசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே நாடாளுமன்றத் தேர்தலின் போது தஞ்சாவூர் தொகுதியை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் காமராஜ் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு பதவி அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே காமராஜ் மனகுமுறலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தஞ்சாவூர் தொகுதிக்கான வேட்பாளரை கூட பரிந்துரை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இம்முறை கொங்கு மண்டலத்தில் மிஸ்ஸாகும் தொகுதிகளை டெல்டா மாவட்டங்களில் வென்று நேர் செய்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருந்தார்.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே வைத்திலிங்கம் ஓபிஎஸ் உடன் பயணித்து வருகிறார். அதேபோல் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்த சதீஷ்ராஜ் உள்ளிட்டவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படுவதில்லை. இதனால் அமமுக கூட்டணியில் இணைந்தாலும், அதிமுகவினர் ஒத்துழைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர்களான காமராஜ் மற்றும் ஓஎஸ் மணியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்த வெற்றியை கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications