பாஜக கூட்டணியில் இணைந்த.. சூட்டோடு சூடாக அதிமுக செயற்குழு கூட்டம் அறிவித்த எடப்பாடி.. பிளான் என்ன?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் வரும் மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செயற்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் தவறாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்த நிலையில் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
வரும் மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும், செயற்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

செயற்குழு கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் பங்கேற்பாரா?
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் சில அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இது தொடர்பாக கலந்து பேசப்படும் என்றும், 2026 சட்டசபை தேர்தலுக்கு எப்படி பணியாற்ற வேண்டும், வியூகங்கள் எப்படி அமைப்பது என்றும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் உள்ளிட்டொர் கலந்து கோல்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications