இது முடியாது போல இருக்கே.. மாறி மாறி குற்றஞ்சாட்டும் எடப்பாடி & ஓபிஎஸ்.. குழப்பத்தில் தொண்டர்கள்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
எப்போது அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சு எழுந்ததோ, அப்போதில் இருந்தே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தனித்தனியாக இயங்கும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி எதிர்த்தரப்பைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். மேலும், அதிமுக தொண்டர்கள் தங்கள் பின்னால் தான் இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

அதிமுக
கடந்த வாரம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்த பிரச்சினை அடுத்த கட்டத்திற்குச் சென்றது. ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் இதனால் அவரது இருக்கை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அதைச் சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அக்டோபர் 18ல் அவையைப் புறக்கணித்தனர்.

புறக்கணிப்பு
மறுபுறம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக ஆர்பி உதயகுமாரைச் சபாநாயகர் ஏற்றுக் கொள்வார் என்று எடப்பாடி தரப்பு எதிர்பார்த்தது. இருந்த போதிலும், அதைச் சபாநாயகர் ஏற்கவில்லை. இதற்கான காரணங்களையும் கூட அவர் விளக்கி இருந்தார். அதிமுக எம்எல்ஏக்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமே சட்டசபையில் கலந்து கொண்டனர்.

தர்ணா
இது தொடர்பாக எடப்பாடி தரப்பு கடிதம் எழுதிய சமயத்திலேயே, சபாநாயகரின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று பன்னீர்செல்வம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அக். 18ல் சட்டசபை கூடிய போது அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுவே வந்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை வெளியேற்றச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைக் கண்டித்து பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவைக்குள் தர்ணா நடத்தினர்.

இந்தி திணிப்பு தீர்மானம்
இதற்கிடையில், ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசனின் அறிக்கை காரணமாகவே அதிமுக இப்படி தேவையில்லாமல் பிரச்சினை செய்வதாக திமுக மூத்த தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, "இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதால் இப்படி நடந்து கொள்கிறார்கள். இதில் சந்தேகம் உள்ளது" என்றார்.

ஓபிஎஸ் ஆதரவு
அதேநேரம் அவையில் இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தித் திணிப்பு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து ஒரே நாளில் ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசனின் அறிக்கைகள் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்டன.

கமிஷன் அறிக்கைகள்
இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறுமுகசாமி ஆணைய அறிக்கை ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்ததுடன், சசிகலா உள்ளிட்ட சில நபர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. மறுபுறம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து இருந்தது. குறிப்பாக 17 போலீசார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தது.

பதிலடி
மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எடப்பாடி, திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுவதாகவும் ஓபிஎஸ்ஸை பயன்படுத்தி திமுகவை அழிக்க ஸ்டாலின் முயல்வதாகவும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், அவை முடிந்த உடன் சுமார் 30 நிமிடம் முதல்வர் ஸ்டாலின் உடன் ஓபிஎஸ் பேசிக் கொண்டு இருந்ததாகவும் எடப்பாடி கூறி இருந்தார். இதனால் ஆவேசமடைந்த ஓபிஎஸ், முதல்வருடன் பேசியதை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகுவதாகப் பதிலடி கொடுத்தார்.

தொண்டர்கள்
இப்படி ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி விமர்சித்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருங்கிணைந்த அதிமுகவால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும் என்பதால் ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றே புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications