“மோடி எங்க டாடி” எனக் கூறிய ராஜேந்திர பாலாஜியே மத்திய பட்ஜெட்டை விளாசுறாரு.. இங்க பாருங்க!
சென்னை: முன்பொரு காலத்தில், "மோடி எங்கள் டாடி" எனக் கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் அனைவருக்கும் பொதுவானவர், தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து புறக்கணித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மத்திய பாஜக அரசு என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் மக்களவைத் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில் இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கட்சி வளர்ச்சி தொடர்பாக அதிமுக ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார். களப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்." என்றார்.
8 கோடி தமிழ் மக்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர். அமெரிக்க அதிபர் வேட்பாளர் கூட தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் தான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்பதை மறந்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்காதது திமுகவின் தவறு. நாட்டின் பிரதமர் என்பவரும், நிதி அமைச்சர் என்பவரும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர்.
தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்கு வரிப்பணம் செல்கிறது. ஜிஎஸ்டி செல்கிறது. நமக்குத் தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பீகாருக்கு, ஆந்திராவுக்கு கொடுப்பதில் தவறில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கும் தர வேண்டும்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் முடிவு எடுப்பார். 2026ல் அதிமுக வெற்றிக்காக, அம்மா ஆட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம்" எனத் தெரிவித்து உள்ளார் ராஜேந்திர பாலாஜி.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது.. எங்களுக்கு மோடி இருக்காருய்யா.. மோடி எங்கள் டாடி" எனப் பேசினார். அவரது அந்த பேச்சு மிகவும் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications