திமுக அமைச்சர்களுடன் அதிமுக தலைகள்.. துரைமுருகன் வந்ததும் ஒரே சிரிப்பு மழை.. ஆளுநர் மாளிகையில் கலகல!
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வின்போது திமுக அமைச்சர்கள் அதிமுகவினருடன் சிரித்தபடி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியைச் சந்தித்தார். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகை தந்துள்ளார்.

சென்னையில் ஜனாதிபதி முர்மு: சென்னை வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னாடையும், ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி வரவேற்றார்.
இதையடுத்து இன்று காலை நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஆளுநர் மாளிகையில்: அதைத்தொடர்ந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மணி மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர்ப் பலகை மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் உருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பாரதியார் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளித்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
தேநீர் விருந்தில் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எவ வேலு, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். தேநீர் விருந்தில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து வழங்கினார்.

அதிமுக மாஜி அமைச்சர்கள்: எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் பங்கேற்றார். பெரம்பலூர் எம்.பி, ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பச்சைமுத்துவும் கோட் சூட்டுடன் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாரிவேந்தருடன், திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே எடப்பாடி பழனிசாமி நின்று கொண்டிருந்தார்.
துரைமுருகன் கலகல: அமைச்சர் துரைமுருகன் வந்தபோது, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மூவரும் சிரித்தபடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். கேபி முனுசாமி கையைப் பற்றி சிரித்தபடி விசாரித்தார் துரைமுருகன். திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் இருவரிடமும் சில நிமிடங்கள் சிரித்தவாறே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார் துரைமுருகன்.
அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டு வரும் அதிமுக - திமுக தலைவர்கள், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலகலப்பாக பேசி உரையாடியது அனைவரையும் ஈர்த்தது.












Click it and Unblock the Notifications