ஓபிஎஸ்சுக்கு அடி மீது அடி.. கூடவே இருந்து ’அல்வா’ கொடுத்த ஆதரவாளர்கள்! 3 மா.செக்கள் ஒரே நாளில் ஜம்ப்
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் கணேஷ் ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு 2300க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக அதிமுக கட்சிக்குள்ளே ஒரு கலவரமே வெடித்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் எடப்பாடி தரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்.

இபிஎஸ் தரப்பு
தொடக்கத்திலிருந்தே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு தாவி விட்ட நிலையில், சார்பு அணிகளான எம்ஜிஆர் இளைஞரணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் இபிஎஸ் தரப்புக்கு தாவி விட்டனர்.

8வது நாளாக ஆலோசனை
இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருந்தாலும், "ஏதோ ஒரு காரண"த்திற்காக அவர் இன்னும் நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் 8வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டிற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்த நிலையில், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு
அதேபோல் வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக 15 மாவட்ட செயலாளர்களும் நடுநிலை வகிப்பதாக 15 மாவட்ட செயலாளர்களும் என மொத்தம் 30 மாவட்ட செயலரின் ஆதரவு ஓபிஎஸ்-க்கு இருப்பதாக அதிமுக மூத்த நிர்வாகி என வைத்தியலிங்கம் கூறியிருந்தார். ஆனால் நாளுக்கு நாள் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அணியிலிருந்து தாவல்
அந்தவகையில் நேற்று வரை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயலாளர் விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகச் செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒன்று அல்லது இரண்டு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு மட்டுமே ஓபிஎஸுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றே நாம் கூறியது போல பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக பதவியேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
Recommended Video

அதிரடி முடிவு
இதேபோல பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதம் அனுப்ப வேண்டும் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தை வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டுமெனவும், அதில் எடப்பாடி பழனிச்சாமிக்குப் ஆதரவாக கையெழுத்திட்டு மாவட்டச் செயலாளர்கள் மூலம் கடிதங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தால் இந்தப் பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ .பன்னீர்செல்வம் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications