எடப்பாடியிடம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாருங்கள்.. அதிமுக பொதுக்குழுவில் உச்சி குளிர வைத்த பா வளர்மதி
சென்னை: எடப்பாடியிடம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாருங்கள் என்றும் அரசு பீடம்.. அரச நாற்காலி எடப்பாடி பழனிசாமிக்காக காத்து கொண்டிருக்கிறது என்றும் எடப்பாடியை மக்கள் விரும்பியபடி முதல்வராக ஆக்குவோம் என வீர சபதம் ஏற்போம் என்றும் முன்னாள் அமைச்சர் பா வளர்மதி பேசினார்.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பா வளர்மதி எடப்பாடியிடம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பார்க்கலாம் என்று கூறினார். இது தொடபார்க அவர் கூறியதாவது:- கொள்ளையடித்த பணம் துபாயிலே வெள்ளையாகி கொண்டே இருக்கிறது. இதை தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் என்பார்கள்.

குங்குமப்பொட்டோடும் கும்பிட்ட கையோடும் உறவாட வந்து பகையாடிய துரோகிகளை தோலுரித்து தொங்கவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. கசாப்பு கடைக்காரர் காந்தியம் பேசுவது போல இந்த அதர்மவாதிகள் எல்லாம் தர்மயுத்தம் என்றார்கள். அரசியல் வரலாற்றிலே ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்காவை எதிர்த்து வியட்நாம் நாடு நீண்ட விடுதலை போர் நடத்தியது.
போருக்கு தலைமையேற்றவர் கோசிப். அப்போது ஒரு கவிஞன் பாடினான் தேரின் பீடம் ஒரு தளபதிக்காக காத்திருக்கிறது என்று. அதே சூழ்நிலை தான் இப்போதும் நிலவிக்கொண்டிருக்கிறது நம் தமிழ்நாட்டிலே. அரச பீடம்.. அரச நாற்காலி.. எடப்பாடி பழனிசாமிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்திலே தமிழ்நாட்டையே புரட்டிப்போட்ட புயல் வெள்ளத்தை கையாள தெரியாமல் திமுகவின் கையாளாகாத அரசு மக்கள் மத்தியில் வெறுப்பை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கத்துக்குட்டிகளுக்கு தகுதியில்லை: மக்கள் கோபத்திலே கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் கோபத்திலே குமுறிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் கோபம் என்ற புயல் காற்று நம் காதிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது. குமுறும் எரிமலையை நம் கண்கள் பார்க்க தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரியார் தொடங்கி வைத்த அறிவு புரட்சியை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று வளர்ச்சி பெற்று இன்று திராவிட இயக்கத்தின் வடிவமாக அந்த மகத்தான தலைவர்களின் வாரிசாக எடப்பாடி விளங்கிக்கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு மத்திய அரசிடம் நிதி வாங்குவதற்கு நீங்களும் வாருங்கள் என்று சில கத்துக்குட்டிகள் அழைத்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களை பார்த்து கேட்க விரும்புகிறேன். அன்றைக்கு அரிசி கேட்டு எம்ஜிஆர் கடற்கரையில் உண்ணாவிரம் இருந்தார். காவிரி நதி நீர் கேட்டு ஜெயலலிதா கடற்கரையில் உண்ணாவிரம் இருந்தார். அன்றைக்கு இவர்கள் ஆதரவு தந்தார்களா?..

தொட்டு விடும் தூரத்தில்: உடன் வந்தார்களா? எடப்பாடியை அழைக்க கூட தகுதியில்லாத சில ஜென்மங்கள் இன்றைக்கு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தொண்டனாக இருந்து தற்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார். எடப்பாடியிடம் ஜெயலலிதாவை பாருங்கள்.. எடப்பாடியிடம் எம்ஜிஆரை பாருங்கள். அவர் நமக்கு வழிகாட்டுவார்.
களத்திலே நமக்கு தோல் கொடுப்பார். நம்முடைய பகை விலகும். நம்முடைய வெற்றி தொட்டு விடும் தூரத்தில் தான் இருக்கிறது. கடுமையாக உழைப்போம். எடப்பாடியை மக்கள் விரும்பியபடி முதல்வராக ஆக்குவோம் என வீர சபதம் ஏற்போம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications