பிளவு ஏற்படுத்தும் பாஜக.. தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய திமுக! உரிமைக் குரலாக அதிமுக..! இபிஎஸ் பளீச்.!
சென்னை : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்டு, வாக்கு சேகரித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,” நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்! அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன்- பதில் சொல்ல முடியாமல் நழுவினார்! இப்போது எஜமானர்களான உங்களிடமே வந்தேன்- 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் நம் கேள்விகளை உரக்கக் கேட்டேன்- பதில் சொல்ல திராணியின்றி என் மீது தனிப்பட்ட விமர்சனம் தான் வைத்தார்!
மு.க.ஸ்டாலின்: என்னைப்பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி இருந்ததா? இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழ்நாட்டைக் காக்கத் தவறிய, பொய் வாக்குறுதிகளால் மக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஒரு விடியா ஆட்சி தான் திரு. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி.
நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விடியா முதல்வரிடம்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) April 17, 2024
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினேன்- பதில் சொல்ல முடியாமல் திணறினார்!
அறிக்கை வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும்… pic.twitter.com/zDEx80Gdba
பிரித்தாளும் சூழ்ச்சி: ஒரு மக்களவை உறுப்பினரின் அடிப்படைக் கடமையான MPLADS நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த திமுக கூட்டணி எம்பிக்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்? இவர்கள் ஒருபுறம் எனில், நம் மாநிலத்தின் உரிமைகளை கிஞ்சற்றும் மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பாரதிய ஜனதா அரசு மறுபுறம். மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் தமிழ்நாட்டில், குறிப்பாக அதிமுகவிடம் ஈடேறாது.
திமுக-பாஜக ஒன்றுதான்: அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே- வரும் 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பதும், பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். நம் மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்பிக்கள் இருந்தும் மவுனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த திமுகவையும் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள்: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள், மக்களவையில் உங்களின் குரலாக, நம் தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன். தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- புரட்சித்தலைவர் எம்ஜிஆர்- புரட்சித்தலைவி அம்மா ஆகிய திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் ஆளுமைகள் கட்டமைத்த வளமிக்க தமிழ்நாட்டை, சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம் ஆகிய கொள்கை நெறிகொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சிசார் பாதையில் வழிநடத்த உங்கள் பொன்னான வாக்குகளை #இரட்டைஇலை சின்னத்திலும் #முரசு சின்னத்திலும் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications