அதிமுக பொன் விழாவையொட்டி மாநாடு நடத்துவோம்... மூத்த நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கை..!
சென்னை: அதிமுக பொன் விழாவையொட்டி மாநாடு நடத்த வேண்டும் என இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
மேலும், பொன் விழா ஆண்டான 2021 அக்.17 முதல் -2022 அக்.16 வரை, அடுத்த ஓராண்டுக்கு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களின் கருத்தை கேட்டுக்கொண்ட ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஆகிய இருவரும் விரைவில் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்
அதிமுக பொன்விழாவை எவ்வாறு கொண்டாடுவது, என்னென்ன மாதிரி கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்தெல்லாம் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை விரிவாக ஆலோசிக்கப்படிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக பொன்விழா மாநாடு குறித்து பேசப்பட்டிருக்கிறது.

கட்சி நிகழ்ச்சிகள்
இதேபோல் அடுத்த வரும் ஓராண்டு முழுவதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி அதிமுகவின் கொடியை பறக்க விட வேண்டும் எனப் பேசப்பட்டிருக்கிறது. அநேகமாக வரும் பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்தநாள் வருவதால், அப்போது அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர், தனித்தனியாக காரை விட்டு இறங்கியதும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

உற்சாக வரவேற்பு
இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் குறையேதும் இருந்ததாக தெரியவில்லை. பூங்கொத்துக்களை அவரிடம் கொடுப்பதற்காக நிர்வாகிகள் முட்டி மோதி நின்றதை காண முடிந்தது. அதேவேளையில் ஓ.பி.எஸ். வருகை தந்த போது, அந்தளவுக்கு வரவேற்பு கொடுக்கப்படாதது கவனிக்கத்தக்கது. கூட்ட அரங்கத்திற்குள்ளும் ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இடையே பெரியளவில் நெருக்கம் இருந்ததாக தெரியவில்லை.

இளைஞர்கள்
அதிமுகவின் சீனியரும், கட்சியில் அதிகாரமிக்கவருமான தங்கமணியிடம் இளைஞர் கூட்டத்தினர் கட்சிப் பதவி தொடர்பான கோரிக்கைகள் முன் வைத்ததையும் அங்கு காண முடிந்தது. இதனிடையே அதிமுக பொன்விழா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியிடம் நாம் பேசிய போது, ''ஆலோசனைக் கூட்டம் தொடர்பான முடிவுகளை கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும்'' என முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications