நாளை சென்னை வரும் அமித்ஷா.. ஒபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக அவசர ஆலோசனை!
சென்னை: நாளை அமித்ஷா சென்னை வர உள்ள நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிரடி காட்டி வருகிறது. திமுகவை அட்டாக் செய்து, வேல்யாத்திரை நடத்துவது, பிரபலங்களை கட்சியில் சேர்ப்பது என தீவிரமாக வேலை செய்கிறது.
இந்நிலையில் நாளை பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வருகிறார். அவர் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதுடன், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 4.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ.380 கோடியிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.. அத்துடன் ரூ.61843 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதிக சீட் கேட்பார்
அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தேர்தலில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கேட்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மைக்கால அரசியல் சூழலை பார்த்தால் பாஜக அதிக இடங்களை கேட்டு அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த சூழலில் இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்தது
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அமித் ஷா வர உள்ளதால் அவரிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே இன்றைய மீட்டிங் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications