அதிமுக உட்கட்சிப் பிரச்சினை: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி முக்கிய மனு
அதிமுகவில் விதிகள் திருத்தப்பட்ட நிலையில், அன்வர்ராஜா நீக்கப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் ஆணையத்தில் முக்கிய மனு ஒன்றை அளிக்க உள்ளார் புகழேந்தி. கர்நாடக மாநில அதிமுக செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர், சசிகலா ஆதரவாளர், மீண்டும் அதிமுக என வந்தவர் பின்னர் நீக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் ஆணையத்தில் முக்கியமான மனு ஒன்றை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோது கர்நாடக மாநில அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் புகழேந்தி. சசிகலா தரப்பிடம் மிகவும் நெருக்கமாக, விசுவாசமாக, செல்வாக்காக இருந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் கர்நாடக மாநிலச் செயலாளராக தொடர்ந்தார். அதன் பின் சசிகலா சிறைச் சென்றபோது அனைத்து வசதிகளையும் அளித்து, சட்டரீதியாகவும் உதவி புரிந்து வந்தார்.

அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கம் உடன் சென்ற புகழேந்தி
அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியபோது புகழேந்தியும் விலகினார். தீவிர சசிகலா ஆதரவாளராக தொடர்ந்தார். டிடிவின் வலதுகரமாக விளங்கினார். அமமுக தொடங்கப்பட்டபோது முக்கிய புள்ளியாக செயல்பட்டார். அதிமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்து வந்தார். ஊடக விவாதங்களில் பங்கேற்று கடும் விமரனத்தை வைத்தார்.

டிடிவியுடன் கருத்து வேறுபாடு அதிமுகவுக்கு தாவல்
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அமமுகவிலிருந்து விலகினார். அதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எடப்பாடியை சந்தித்து வந்தார் பின்னர் திடீரென அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் செய்தி தொடர்பாளராக செல்வாக்காக இருந்தார் அதிமுக சார்பாக ஊடக விவாதங்களில் பங்கேற்றார். ஓபிஎஸ் ஆதரவாளராக வலம் வந்தார்.

அன்புமணியுடன் மோதல் அதிமுகவிலிருந்து நீக்கம்
அதிமுக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோவி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. 'எங்கள் தயவால் தான் அதிமுக இத்தனை இடங்களை வெல்ல முடிந்தது' என பாமகவின் அன்புமணி ராமதாஸ் சொன்னதற்கு புகழேந்தி பதிலடி கொடுத்தார். இதற்கு மறுநாள் , 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக' அவர் மீது நடவடிக்கை எடுத்து அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார்.

எடப்பாடி மீது புகார்
கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசமி, ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். அவரால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டுவிட்டார். எடப்பாடி பழனிசாமி என் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை அகம்பாவ ஆணவத்தின் உச்சம். நான் தெரியாமல் தான் கேட்கிறேன்... 'நாங்கள் இல்லை என்றால் அதிமுக 20 இடத்தில் தான் ஜெயித்திருக்கும்' என ஒரு சுண்டைக்காய் அளவுள்ள கட்சி சொல்வதை கேட்டுக்கொண்டு சொரணை உள்ளவனால் எப்படி சும்மா இருக்க முடியும்? என்று அப்போது புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

ஒதுங்கியிருந்த புகழேந்தி
அதன் பின்னர் கட்சி எதிலும் சேராமல், சசிகலாவைக்கூட சந்திக்காமல் ஒதுங்கி இருந்துவருகிறார் புகழேந்தி. ஊடக விவாதங்களில் கலந்துக்கொள்ளும் அவர் அதிமுக ஜெயலலிதா காலத்தில் இருந்த மரியாதையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகிறார்.
Recommended Video

தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்நிலையில் புகழேந்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் அவர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளிக்கிறார். அதில் கட்சி நடவடிக்கைகளில் அதிமுக தலைமை எடுக்கும் முடிவு வரம்பு மீறியதாக உள்ளது. கட்சி திட்ட விதிகளில் உள்ள நடைமுறையை சுட்டிக்காட்டி ஆட்சேபித்து மனு அளிக்க உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications