மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி? 2 நொடி யோசித்து அண்ணாமலை கொடுத்த பதில்.. ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், இப்போதே தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுக்கள் எழத் தொடங்கிவிட்டன. குறிப்பாக அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களை எதிர்கொண்டன.

மீண்டும் கூட்டணி?
இருப்பினும், கடந்த 2023ம் ஆண்டு இந்த கூட்டணி முறிந்தது. அதன் பிறகு இரு கட்சிகளும் தனித்தனியாகவே தேர்தல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமையலாம் என கூறப்படுகிறது. கூட்டணி குறித்த கேள்விகளுக்கு இரு கட்சித் தலைவர்கள் அளிக்கும் பதில்கள் இதற்கு வலுசேர்ப்பதாகவே இருக்கிறது.
அண்ணாமலை சொன்ன பதில்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாகக் கூறுகையில், "திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே அனைவரது நோக்கமாக இருக்கிறது. ஆனால், தேர்தல் களம் வர 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகும். நான் ஏற்கனவே சொன்னது போலத் தான். எங்களைப் பொறுத்தவரை திமுக வீட்டிற்குப் போக வேண்டும். பாஜக இங்கே வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள்.
நாங்கள் அனைவரிடமும் அன்பாகவே பழகுகிறோம். எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. பாஜக தமிழகத்தில் நன்கு நிலைத்து வளர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தேர்தல் காலத்தில் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது. என்டிஏ கூட்டணியில் யார் வருவார்கள் உட்பட கூட்டணி குறித்து எல்லாம் வரும் காலங்களில் பேசி முடிவெடுக்கலாம்" என்றார். அதிமுக வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு அண்ணாமலை நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக மீண்டும், "வரும் காலங்களில்" என்று மட்டுமே குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும். இதற்குத் தேவையான கூட்டணியை அமைப்போம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி இல்லை. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்துப் பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
திடீர் மாற்றம்
இதற்கு முன்பு வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடனான கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்றே கூறி வந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சித்தே வந்தார். இந்தச் சூழலில் தான் இரு தரப்பும் தங்கள் டோனை இப்போது மாற்றியுள்ளது. இது வரும் காலத்தில் கூட்டணி அமைப்பதற்கான சிக்னலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு வரை உள்ளது. அரசியலில் ஓராண்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. எது வேண்டுமானாலும் மாறலாம்.. இருப்பினும், தற்போதைய நிலை தொடர்ந்தால் இரு தரப்பும் மீண்டும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications