வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ சத்யன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக
கழக பணி ஆற்றக் கூடிய
திரு.கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம்.
இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்.
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்.
மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அவர் அந்த பதவில் குறிப்பிட்டுள்ளார். ராஜசத்யன் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப் பார்த்தால் அதிமுகவின் தோல்விக்கு காரணம், ஏற்கெனவே சீட் கொடுத்தவர்களுக்கே மீண்டும் சீட் கொடுத்தது, உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்படுவது போன்றவை என ராஜ சத்யன் சொல்லாமல் சொல்கிறார். இந்த விரக்தியால் பலரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வேலை செய்யாமல் போவதாகவும் அவரது ட்வீட்டில் இருந்து டீகோடு செய்து கொள்ள முடிகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்துவிடும் என்று எண்ணியிருந்த நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது தொண்டர்களுக்கு வேதனையை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அது போதாக்குறைக்கு 47 தொகுதிகளில் வென்ற நிலையில் 4 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் அதிமுகவின் பலம் 43 ஆக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் அதிமுக இரண்டாக பிரிந்தது, சிவி.சண்முகம் சொன்ன திரை மறைவு பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவைதான் என சொல்லப்படுகிறது. இந்த தவறுகளில் இருந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலாவது அதிமுக பாடம் கற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications