உங்க திட்டம் புரிகிறது.. நடக்க விடமாட்டோம்.. தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஸ்டாலின் கொந்தளிப்பு!
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவது சந்தேகம் தருகிறது, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவது சந்தேகம் தருகிறது, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவும், மாநில தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்கு மீதான அவசர விசாரணை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.

தேர்தல் எப்படி
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் பேட்டி அளித்தார். அதில், தேர்தல் முறையாக நடைபெற வேண்டுமென்ற நோக்கில்தான் திமுக, நீதிமன்றம் சென்றது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும். அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் மூலம் முறைகேடு செய்ய முயற்சித்து வருகிறது.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது. நாடு முழுக்க உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு இருக்கிறது. அங்கெல்லாம் நகராட்சி அமைப்புகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படவில்லை.

ஆனால் புதுசு
ஆனால் தமிழகத்தில் புதிதாக தனியாக நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துகிறார்கள். நிர்வாக காரணம் என்று தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. அதிமுகவுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தலைவரே முதல்வர் பழனிசாமிதான் என்று நினைக்கிறேன்.

யார் ஆணையர்
அவரின் சொல்படிதான் எல்லாம் நடக்கிறது.தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற இப்படி செய்கிறார்கள்.வார்டு மறுவரையரை செய்யும் வரை தேர்தலை நடத்த அனுமதிக்க மாட்டோம். இதற்கு எதிராக இரண்டு வழக்குகள் இருக்கிறது. ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இன்னொரு வழக்கு
இன்னொரு வழக்கு 5ம் தேதி அவசரமாக விசாரிக்கப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை அணுகுவோம். இது தொடர்பாக இன்று மாலை சட்ட வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை செய்ய இருக்கிறோம், என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications