அதிமுகவை சமாதானப்படுத்த முயன்ற 'பாஜக முதல்வர்'- 'ஏக்நாத் ஷிண்டே' ஏற்பாட்டால் சீறிய எடப்பாடி!
சென்னை: அண்ணா திமுகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் டெல்லி பாஜக மேலிடத்துடன் ஒப்புதலுடன் யாருமே எதிர்பாராத வகையில் இன்னொரு மாநில முதல்வர் களமிறக்கப்பட்டதாகவும் 'குழிபறிக்கும்' ஏக்நாத் ஷிண்டேவின் இந்த ஏற்பாட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் போக்கால் கடுப்படைந்த அண்ணா திமுக, ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இது ஒரு அரசியல் நாடகம் என திமுக கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது விலகியதான் என அதிமுக திட்டவட்டமாக உள்ளது.

அஸ்ஸாம் முதல்வர் தலையீடு: இதனிடையே தமிழ்நாட்டுக்கு வருகை தந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா, அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் டெல்லி பாஜக மேலிடத்தின் ஒப்புதலுடன் களமிறங்கினார். பாஜகவில் தேசிய அளவில், மாநிலங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக் கூடிய புதிய முகமாக அண்மைக்காலமாக ஹிமந்த பிஸ்வா சர்மா உருவெடுத்து வருகிறார்.
அதிமுக, பாஜக தலைகளுடன் சந்திப்பு: தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வேலூரில் அஸ்ஸாம் பவனை திறந்து வைத்தார் ஹிமந்த பிஸ்வா சர்மா. அத்துடன் அஸ்ஸாம் மாநிலத்தில் "சில பல" பணிகளை செய்து வரும் மூத்த அதிமுக தலைவர் மற்றும் "அவருக்கு" மிக நெருக்கமான பாஜக பிரமுகர் ஆகியோரையும் ஹிமந்த பிஸ்வா சர்மா சந்தித்து பேசியிருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டே ஏற்பாட்டால் சீற்றம்: இந்த சந்திப்புகளைத் தொடர்ந்தே எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதற்கு ஹிமந்த பிஸ்வா சர்மா முயற்சித்தாராம். தொடக்கத்தில் எந்த பதிலும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்படவில்லையாம். பின்னர்தான் இந்த சமாதான முயற்சிகளின் பின்னணியில் அதிமுகவை உடைக்க சதி செய்த "ஏக்நாத் ஷிண்டே" இருப்பதை புரிந்து கொண்டதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதனால் ஹிமந்த பிஸ்வா சர்மாவை சந்திக்க முடியாது; விருப்பம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதிலளிக்கப்பட்டுவிட்டதாம். இதில் ஹிமந்தவுக்கு பெரும் ஏமாற்றமாம்.












Click it and Unblock the Notifications