அவருக்கு கீழயா? சீனியருக்கு மரியாதையே இல்லையா? செங்கோட்டையனை தடுத்த ஈகோ! உண்மைக் காரணமே இது தான்!
சென்னை: அதிமுகவின் மிக மூத்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சுக்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாதது மட்டுமே அல்ல எனவும், செங்கோட்டையனின் பெயரும் ஒரு காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட விழாவில் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இடம் பெறவில்லை என அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்த சீனியருமான செங்கோட்டையன்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு, அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்காக அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முகமாக தற்போது முன்னிறுத்தப்படுகிறார். அதிமுக மேடைகள், நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட செயலாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற பேச்சு ஏற்கனவே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் விழா ஏற்பாட்டாளர்கள் தனது பெயரையே இன்னொரு முன்னாள் அமைச்சர் பெயருக்கு கீழே போட்டு விட்டார்கள் என்பது தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோபத்திற்கு காரணம் என்கின்றனர் அதிமுகவினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட அழைப்பிதழில், அத்திக்கடவு அவினாசி திட்ட நாயகர் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என அவரது புகைப்படத்துடன் அந்த அழைப்பிதழில் மேலும் சில நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு பிறகாக எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையனின் பெயர் இடம் பெற்றுள்ளது அதில் முதல் பெயராக தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி அவர்கள் என்றும், அவர் பெயருக்கு கீழே கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிமுக எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அரசியல் செய்து, ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் செல்வாக்கோடு இருந்த தனது பெயரை, அதற்குப் பிறகு கட்சிக்கு வந்த எஸ்.பி.வேலுமணியின் பெயருக்கு கீழே போட்டு இருப்பதா என அப்போதே செங்கோட்டையன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் தான் அவர் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு, இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்ற கோபமும் சேர்ந்து கொள்ள தற்போது புதிய புயலை கிளப்பி இருக்கிறார் என்கின்றனர் அதிமுக மாஜி செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications