எண்ணி ஒரு மாசம்தான் ஆகுது! அதுக்குள்ள தளவாய் சுந்தரத்திற்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்பு!
சென்னை: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டு ஒரு மாத காலமே ஆன நிலையில் மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகளை வழங்கியுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த அக்டோபர் மாதம் கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததால் இந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மேலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டது ஏன் என்பது குறித்து தளவாய் சுந்தரம், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம் விளக்கமளித்து மன்னிப்பு கேட்டார்.

இதையடுத்து அவரது விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு மீண்டும் கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கிய காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. அப்படிப்பட்டவரே நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு யாரையும் இழப்பதற்கு எடப்பாடி விரும்பவில்லை என்பதால்தான் தளவாய் சுந்தரத்திற்கு இந்த பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications