அதிமுகவில் தொடரும் ஒற்றை தலைமை விவகாரம்.. இன்று தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு முக்கிய ஆலோசனை!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்துள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவில் திடீரென இப்போது ஒற்றை தலைமை என்ற முழக்கம் எழுந்துள்ளது. இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையே மோதல் எழுந்துள்ளது.
இரு தரப்பு ஆதரவாளர்களும் இது குறித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒற்றை தலைமை
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாலேயே முக்கியத்துவம் இல்லையென்றாலும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தார்.

ஆலோசனை
அதேபோல மறுபுறம் எடப்பாடி பழனிசாமியும் முக்கிய நிர்வாகிகள் உடன் கடந்த 4 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்பார்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் வெளிப்படையாகக் கருத்து கூறி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.

ஓபிஎஸ்
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்த தம்பிதுரை, பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளை அவர் ஓ.பி.எஸ்ஸிடம் கூறியதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து நேற்றிரவு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மைத்திரேயன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
அதேபோல பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்தித்த ஓபிஎஸ் அவரிடம் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், அன்பழகன், சிவி சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைகளைப் பெற இரு தரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள்
மேலும், நாளை சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மாவட்டச் செயலாளர்களை ஓபிஎஸ் தனியாகச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்காக ஓபிஎஸ் தரப்பில் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டதாகவும் இருப்பினும் சில மாவட்டச் செயலாளர்கள் இரு தலைவர்களும் ஒன்றாக அழைத்தால் மட்டுமே வர முடியும் எனத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று முக்கிய ஆலோசனை
இதனிடையே சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மான குழு இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஒற்றை தலைமை விவகாரம் முதலில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications